காங்கேசன்துறை ஊடாகத் தமிழகத்துக்கு அனுப்பி வைப்படும் இந்திய மீனவரின் சடலம்
புதிய இணைப்பு
யாழ். காரைநகர் கடற்பரப்பில் உயிரிழந்த இந்திய மீனவரின் சடலம் நடுக்கடலில் இந்தியக் கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு பின் மீனவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
யாழ். காரைநகர் கடற்பரப்பில் உயிரிழந்த இந்திய மீனவரின் சடலம் இன்று காங்கேசன்துறை ஊடாகத் தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்படுவதாக தெரியவருகிறது.
காரைநகர் - கோவளம் பகுதிக்குள் 18ஆம் திகதி ஊடுருவிய இந்திய மீனவரின் படகு கடற்படையினரின் படகுடன் மோதியதில் இந்திய மீனவரின் படகு முழுமையாகக் கடலில் மூழ்கியது.
இதன்போது இரு இந்திய மீனவர்கள் மீட்கப்பட்டபோதும் ஒருவர் காணாமல்போயிருந்தார். இவ்வாறு காணாமல்போன இந்திய மீனவரை தேடும் பணிகள் 18ஆம் திகதி இரவு மற்றும், 19ஆம் திகதிகளில் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டது.
காணாமல்போன இந்திய மீனவர் 20ஆம் திகதி நண்பகல் இலங்கை கடற்படையினரால் சடலமாக மீட்கப்பட்டு காங்கேசன்துறை கடற்படை தளத்திற்குக் கொண்டு வரப்பட்டிருந்தார்.
அவ்வாறு காங்கேசன்துறைக்கு கொண்டுவரப்பட்ட உடலை காங்கேசன்துறைக்கு சென்ற தடயவியல் பொலிஸார் மற்றும் நீதிபதி ஆகியோர் பார்வையிட்டு பின் பிரேதப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது.
இதன் பிரகாரம் 20ஆம் திகதி மாலை காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பிரேதப் பரிசோதனையும் இடம்பெற்று நீரில் மூழ்கியதனால் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அதன் அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பித்து உடலம் தமிழகம் அனுப்புவதற்கான பணி இடம்பெற்ற போதும், உயிரிழந்த மீனவனுடன் பயணித்த ஏனைய இரு மீனவர்களையும் விடுவிக்குமாறு விடப்பட்ட கோரிக்கையால் காலதாமதமானது
இந்த தாமதம் தமிழக மீனவர்களின் போராட்டங்கள் அதிகரிக்கக் காரணமானதால் உயிரிழந்த தமிழக மீனவரின் சடலம் மட்டும் இன்று காங்கேசன்துறை ஊடாக எடுத்துச் செல்லப்பட்டு இந்தியக் கடற்படையிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
இவ்வாறு ஒப்படைக்கப்படும் சடலம் இன்று பகல் 2 மணியளவில் உயிரிழந்தவரின் உறவுகளிடம்
ஒப்படைக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.