12 வாரங்களை பூர்த்தி செய்த கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்ள முடியும்! வைத்தியர் தர்சினி காந்தரூபன்
12 வாரங்களைப் பூர்த்தி செய்த கர்ப்பிணி பெண்கள் அனைவரும் குழந்தையினை பிரசவிக்கும் வரையில் தங்களுக்குரிய தடுப்பூசிகளைப்பெற்றுக் கொள்ளமுடியும் என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக சமூக சுகாதாரப் பிரிவுக்கான பொறுப்பதிகாரி வைத்தியர் தர்சினி காந்தரூபன் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி ஏற்றப்பட்ட காலம் தொடக்கம் எந்த கர்ப்பிணிப்பெண்ணுக்கும் பக்க விளைவுகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குச் சினோப்பாம் தடுப்பூசிகள் ஏற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளிலும் இன்று காலை தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கோவிட் அச்சுறுத்தல் அதிகமாகவுள்ள பகுதிகளில் தொடர்ச்சியாகத் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
மட்டக்களப்பு கூழாவடி, விக்னேஸ்வரா கலாச்சார மண்டபத்தில் இன்று காலை முதல் கோவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பெருமளவானோர் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டதைக் காணமுடிந்தது என தெரிவித்துள்ளார்.