இலங்கையில் 400ரூபாவாக உயரும் பெட்ரோல் விலை! பாரிய நெருக்கடியைச் சந்திக்கப் போகும் மக்கள்
மத்தியக் கிழக்கு போர்ப் பதற்றம் காரணமாக இலங்கையில் பெட்ரோல் ஒரு லீட்டரின் விலை 400 ரூபாய் வரையில் அதிகரிக்கக் கூடும் என பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர் பிரசன்ன பெரேரா தெரிவித்துள்ளார்.
டீசல் லீட்டர் ஒன்றின் விலை 390 முதல் 400 ரூபா வரையிலும் உயரக் கூடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
400ரூபாவாக உயரும் பெட்ரோல் விலை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் முறையான நடைமுறைத் திட்டங்கள் மற்றும் பொருளாதார நிபுணத்துவம் இன்றி செயற்படுகின்றனர்.

குறிப்பாக இலங்கைக்குக் கிடைக்கும் வெளிநாட்டு வருமானத்தில் சுமார் 50 சதவீதத்திற்கும் அதிகமான தொகை மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தே கிடைக்கின்றது. போர்ச் சூழல் காரணமாக இந்த வெளிநாட்டு வருமானம் சுமார் 2.4 பில்லியன் டொலர்களாலும், சுற்றுலா வருமானம் 1.6 பில்லியன் டொலர்களாலும் குறையக்கூடும்.
அத்துடன், கப்பல் காப்புறுதி மற்றும் போக்குவரத்து கட்டண அதிகரிப்பால் ஏற்றுமதி வருமானம் 4 பில்லியன் டொலர்களாலும் வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளது. இதன் காரணமாக 2022ஆம் ஆண்டில் காணப்பட்ட பாரிய பொருளாதார நெருக்கடி நிலைக்கு நாடு மீண்டும் தள்ளப்படும் அபாயம் உள்ளது.
உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பால், உள்நாட்டில் ஒரு லீட்டர் பெட்ரோல் விலை 400 ரூபா வரையிலும், டீசல் விலை 390 முதல் 400 ரூபா வரையிலும் அதிகரிக்கக்கூடும்.
இதன் நேரடி விளைவாக மின்சாரக் கட்டணம் சுமார் 40 சதவீதத்தினால் அதிகரிக்கப்படலாம் என குறிப்பிட்டுள்ளார்.