வத்தளை வீடொன்றிலிருந்து சட்டவிரோத ஆயுதங்கள் மீட்பு
வத்தளை பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து சட்டவிரோத ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
மாபோலை - தூவவத்தை பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் கூரைத்தகடுகளுக்கு இடையில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் ஒரு தொகை துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
வௌிநாடுகளில் தயாரிக்கப்பட்ட ஐந்து துப்பாக்கிகள் மற்றும் அவற்றுக்கான தோட்டாக்கள் என்பன இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தடுப்புக்காவல் உத்தரவு
இதனையடுத்து அவற்றை சட்டவிரோதமான முறையில் மறைத்து வைத்திருந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் 59 வயதுடையவர் என்றும் உரத் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகின்றவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோத துப்பாக்கிகளை மறைத்து வைத்திருந்த சம்பவம் தொடர்பில் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டு சந்தேக நபரை விசாரிக்கவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.