கிளிநொச்சியில் தொடரும் சட்டவிரோத மணல் அகழ்வு: பிரதேச மக்கள் கடும் விசனம்
கிளிநொச்சி - இரணைமடு குளத்தின் கீழ் பகுதியில் அதிகரித்துள்ள சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்குமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சட்டவிரோத மணல் அகழ்வினால் இரணைமடு குளத்திற்கும் அதனை சூழவுள்ள வயல் நிலங்களுக்கும் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
இரணைமடுகுளத்திற்கு கீழ் கோரமோட்டை ஆற்றுப்பகுதியிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் சமீப காலமாக சட்டவிரோத மணல் அகழ்வு கட்டுக்கடங்காது மிக மோசமாக அதிகரித்துள்ளது.
சட்டவிரோத மணல் அகழ்வு
இது தொடர்பில் உரிய தரப்பினர்களுக்கு தகவல் வழங்கும் சமூக செயற்பாட்டாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதோடு, அவர்களின் வீடுகளுக்குள் பட்டாசுகளை கொளுத்தி எறிந்து எச்சரிக்கை விடும் செயற்பாடுகளும் இடம்பெற்றுவருகிறதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் கண் முன்னே இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் பலர் மௌனமாக கடந்து சென்று விடுகின்றனர்.
இவ்வாறு சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்படுகின்றவர்களுக்கு பொலிஸ், பாதுகாப்புத் தரப்பினர்கள், அரசில்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் செல்வாக்கு இருப்பதாகவும் இதனால் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் எவரும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் குறிப்பிடுகின்றனர்.
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் அவர்களால் கூட்டத்தில் கலந்துரையாடப்படுவதோடு நடவடிக்கை நின்றுவிடுகிறது.
மாவட்ட எம்பியிடம் முறையிட்டால் அவரும் திரும்பி பார்ப்பதாக இல்லை, பொலிஸ் உட்பட பாதுகாப்பு தரப்பினர்களிடம் முறையிட்டால் அவர்கள் மணல் அகழ்வோரிடம் எங்களை காட்டிக்கொடுக்கின்றனர் என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |