கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவோரின் அத்துமீறிய செயல் (Photos)
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முரசுமோட்டை மருதங்குளம் மற்றும் உப்பாறு ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக விவசாய நிலங்களிலும், விவசாய வீதிகளிலும் சட்டவிரோத மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் விவசாயிகள் தங்களுடைய பயிர் செய்கைகளுக்கு நீர்ப்பாசனம் செய்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் குறித்த செயற்பாடுகளை கட்டுப்படுத்துமாறு நேற்றைய தினம் (19) விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்துக்கு சென்று உயர் அதிகாரிகளை சந்தித்து மணல் அகழ்வுகளை கட்டுப்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனையடுத்து ”சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடும் சந்தேக நபர்கள் சிலர் கிளிநொச்சி விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளின் தொலைபேசிகளுக்கு அழைப்பெடுத்து அச்சுறுத்தியுள்ளனர்” என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியும் பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் நேற்றிரவு குறித்த விவசாய அமைப்புக்களின் பிரதிநிதியும் கரைச்சி பிரதேச சபை உறுப்பினருமாகிய மயில் வாகனம் நந்தகுமார் என்பவரின் வர்த்தக நிலையத்துக்கு முகத்தை மூடிக் கட்டியவாறு மோட்டார் சைக்கிளில் சென்ற மூவர் அவரது வர்த்தக நிலையத்தின் கதவு தளபாடங்களை அடித்து சேதமாக்கியுள்ளனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.