கிண்ணியாவில் சட்டவிரோத சிப்பித் தொழிற்சாலைகள் முற்றுகை : இருவர் கைது
திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காக்காமுனை களப்புப் பகுதியில் முறையான அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக இயங்கி வந்த இரண்டு சிப்பித் தொழிற்சாலைகளை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று(24) முற்றுகையிட்டுள்ளனர்.
இந்த அதிரடி நடவடிக்கையின் போது இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன், பெருமளவிலான சிப்பிகள் மற்றும் இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இரகசிய தகவலையடுத்து
காக்காமுனை களப்புக்கு அருகில் சிப்பிகளை அரைக்கும் தொழிற்சாலைகள் சட்டவிரோதமாக இயங்குவதாகக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்தச் சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் டி.எம்.யு. மஹிந்த திஸாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில், மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.ஐய். அருண சமந்த சந்திரபாலவின் மேற்பார்வையில், பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எல். அஜித் குமாரவின் வழிகாட்டலில் இச்சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இந்த முற்றுகையின் போது, 127 மூடை சேமித்து வைக்கப்பட்டிருந்த சிப்பிகள், 04 சிப்பி அரைக்கும் இயந்திரங்கள், குவித்து வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான அரைக்கப்பட்ட சிப்பிகள் ஆகியன கைப்பற்றப்பட்டன.
நீதவான் நீதிமன்றில் முன்னிலை
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் கிண்ணியா, காக்காமுனை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் கைப்பற்றப்பட்ட சான்றுப் பொருட்களுடன் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

சோதனையில் மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் அமில குணசேன, சார்ஜன்ட் பிரதீப் மற்றும் பொலிஸ் கொஸ்தாபல்கள் பங்கேற்றினர்.

விடுதலைப் புலிகள் - தமிழ்ச்செல்வன் விவகாரத்தில் உயிரை பணயம் வைத்த சுரேஸ் சாலே! அலி சப்ரி விடுக்கும் எச்சரிக்கை