யாழில் அரச உத்தியோகஸ்தர்களுக்கான எரிவாயு விநியோகம்: மாவட்ட செயலர் வெளியிட்ட தகவல் (Photo)
யாழ்ப்பாணத்தில் அரச உத்தியோகஸ்தர்களுக்கான எரிவாயு விநியோகத்திற்கும் மாவட்ட செயலகத்திற்கு தொடர்பு இல்லை என மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு எடுத்து வரப்பட்ட 1650 எரிவாயு கொள்கலன்களில் 1000 கொள்கலன்களை யாழ்.மாவட்ட செயலகம் உள்ளிட்ட 21 திணைக்களங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், மிகுதி 650 கொள்கலன்களையே யாழ்ப்பாணம் பிரதேச செயலகம் ஊடாக பொதுமக்களுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் பலர் மத்தியில் விசனத்தினை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பில் மாவட்ட செயலரிடம் வினவிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எரிவாயு கொள்கலன்களின் விலை குறைப்பு
எரிவாயு கொள்கலன்களின் விலை குறைக்கப்படும் என அரசாங்கம் அறிவித்ததமையால் , கொள்கலன்களை பெற்று மக்களுக்கு விநியோகிக்க நாம் விரும்பவில்லை. ஏனெனில் விலை குறைக்கப்படும் என தெரியாது.
பெரியளவில் விலை வீழ்ச்சி ஏற்பட்டால் , அதில் ஏற்படும் நட்டத்தினை யார் மீது சுமத்துவது என்ற பிரச்சினை இருந்தது. அந்நிலையில் திணைக்களங்களின் நலன்புரி சங்கங்கள் ஊடாக திணைக்கள பணியாளர்கள் தமக்கான எரிவாயுவினை பெற்றுக்கொள்ள கோரிக்கைகளை முன்வைத்தது.
அதன் அடிப்படையில் அவர்களுக்கான கொள்கலன்கள் இன்றைய தினம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இருந்த போதிலும் மாவட்ட செயலகத்தில் விநியோகிக்க நான் அனுமதிக்கவில்லை. ஏனைய திணைக்களங்கள் தொடர்பில் அந்த அந்த திணைக்கள தலைவர்களிடமே வினாவ வேண்டும்.
அதேவேளை யாழ்ப்பாணத்திற்கு மாதாந்தம் 60 ஆயிரம் கொள்கலன்கள் தேவைப்படுகின்றன. அந்த வகையில் இதுவரை 40 ஆயிரம் கொள்கலன்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மிகுதியும் மிக விரைவில் வழங்கப்படும் தினமும் யாழ்ப்பாணத்திற்கு 2 ஆயிரம் கொள்கலன்களை எடுத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே எதிர்வரும் வாரத்தினுள், யாழில் கொள்கலன்கள் தாரளமாக பெற்றுக்கொள்ள கூடிய சூழல் ஏற்படும். அதன் பின்னர் நேரடியாக விநியோகஸ்தர்களே தமது வாடிக்கையாளர்களுக்கு கொள்கலன்களை விநியோகிப்பார்கள்”என தெரிவித்தார்.