தமிழரசுக் கட்சி சுயேட்சையாக வேட்பாளர்களைக் களமிறக்கி வெற்றி பெற வேண்டும்: சிறீதரன்
இலங்கைத் தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிட வேண்டுமெனவும், அடுத்த தேர்தல்களில் பங்காளிக் கட்சிகளுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டாலும் அந்த தொகுதிகளில் தமிழரசுக் கட்சி சுயேட்சையாக வேட்பாளர்களைக் களமிறக்கி வெற்றி பெற வேண்டும் என்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நேற்று நடந்த கலந்துரையாடலில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் தேர்தல்களில் தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிட வேண்டும். அடுத்தடுத்த தேர்தல்களில் ரெலோ, புளொட் போன்ற பங்காளிக் கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டால், அங்கு சுயேட்சை வேட்பாளர்களைக் களமிறக்கி அவர்களை நாம் தோற்கடிக்க வேண்டும்.
சுயேச்சை வேட்பாளர்கள்
கிளிநொச்சியில் நான் அப்படி சுயேட்சை வேட்பாளர்களைக் களமிறக்கினேன். அதனால் 3 சபைகளை கட்டுப்படுத்துகின்றேன். கிளிநொச்சியில் எவ்வளவு கட்டுப்பாடாக கட்சியை வைத்துள்ளேன்.
அதேபோல் ஏனைய இடங்களிலும் கட்சியைக் கட்டுப்பாடாக வைத்திருக்க வேண்டும். அரசியல் படிப்பதென்றால் கள்ளுத் தவறணைக்குச் செல்ல வேண்டும்.
ஜனாதிபதி தெரிவு
பிரதேச சபை உறுப்பினர்கள் ஊரில் நடக்கும் மங்கல, அமங்கல நிகழ்வுகளுக்குச் செல்ல வேண்டும். ரெலோ தனித்துச் சென்று ஜனாதிபதியைச் சந்தித்துள்ளது.
ஜனாதிபதிக்கு எம்மில் சிலர் வாக்களித்தனர் என்று சொல்லப்படுகின்றது. அதை அவர்களே வெளிப்படுத்துகின்றார்கள் என தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனும் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.