இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவருக்கு வாழ்த்து: சிவஞானம் சிறீதரன்
நடைபெற்று முடிந்த இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் அமோக வெற்றிபெற்று, இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் திரௌபதி முர்முவிற்கு ஈழத்தமிழர்கள் சார்பிலான தமது இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கின்றோம் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,
அரசியல், பொருளாதார, சமூக காரணிகளால் வலிந்து ஒடுக்கப்பட்ட பழங்குடி மக்களின் நேரடிப் பிரதிநிதியான தாங்கள், உங்களின் தனிமனித வாழ்வில் எதிர்கொண்ட ஏராளமான வலிகளையும், இழப்புக்களையும் அறிந்து நெஞ்சாரத் துயரடைந்துள்ளோம்.
அரசியல் பணிகள்
எனினும் அந்தத் தடைகளையும், வலிகளையும் உந்திக் கடந்ததன் பயனாய் ஆசிரியராக அடிமட்ட மக்களின் சமூகத் தொண்டராக இருந்த தாங்கள் ஒடிசா சட்டமன்ற உறுப்பினராக மக்களுக்கான அரசியல் பணியில் அடியெடுத்து வைத்திருந்ததீர்கள்.
மேலும் ஒடிசா மாநில மீன்பிடி, விலங்கு வள வேளாண்மை அமைச்சராகவும், ஜார்க்கண்டு மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராகவும் பதவி வகித்த தாங்கள், இன்று இந்திய குடியரசின் 2வது பெண் தலைவர் என்ற பெருமிதத்தோடு பதவியேற்றுள்ளமை காலத்தின் பதிவே ஆகும்.
இழப்பின் எல்லைகளைக் கடந்து, நிமிர்ந்தெழுந்து நிற்கும் சரித்திரப் பெண்ணான தங்களை, எமது உணர்வுகளோடு நெருக்கமான எங்களின் பிரதிநிதியாகவே எம்மால் பார்க்கமுடிகிறது.
அத்தகு மனநிறைவோடு மக்கள் பணி என்ற மகத்தான கொள்கையோடும்,
இலட்சியத்தோடும் ஆட்சிப்பீடம் ஏறியிருக்கும் தாங்கள், ஈழத்தமிழர் நலன்சார்
விடயங்களிலும், அரசியல் விவகாரங்களிலும் தங்கள் இயலுமைக்கு உட்பட்ட பணிகளில்
இணைந்து செயற்படுவீர்கள் என்ற பெருநம்பிக்கையோடு உள்ளோம் என தெரிவித்துள்ளார்.