தமிழர் பூமியை பௌத்தமயமாக்கும் சிந்தனை கலையுமா!
வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் பௌத்தமயமாக்கலானது தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசிலும் வலுப் பெற்றுவரும் நிலையில் பல போராட்டங்களும் தீவிரமடைந்துள்ளன.
தமிழ் மக்களின் மத தலங்கள் குறிப்பாக பௌத்தமயமாக்கலுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றது. ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது என்பது இந்த நாட்டின் சாபக்கேடாகும் என்பது தெளிவாக விளங்குகிறது.
நீண்டகாலமாக சிங்கள ஆட்சியாளர்களால் தமிழ்ர்களின் காணி அபகரிப்பு, சைவத் தமிழரின் தளங்களை அழித்தல், நாடுமுழுவதும் இருக்கும் தமிழர் தொல்லியல் சின்னங்களை அழித்தல் மற்றும் உருமாற்றம் செய்தல், இந்துக்களின் கோயில்களின் வழிபாடுகளைத் சட்டத்திற்கு முரணானவகையில் தடுத்தல், ஆலயங்களுக்குச் சொந்தமான நிலங்களை அபகரித்தல் எனும் அத்துமீறல்கள் தொடர்கதையாகவே செல்கின்றது.
ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே சட்டம் எனக்கூறிப் பெரும் பிரச்சாரம் செய்துவந்த அநுர அரசாங்கம் முன்னைய ஆட்சியாளர்கள் செய்த சட்டவிரோதப் பணிகளையே இன்னும் தொடர்ந்து வருகின்றது.
கோட்டாபயவின் ஆட்சி
கோட்டாபயவின் ஆட்சியைப் போன்று இந்த அரசும் செயற்படுகின்றது. குறிப்பாக இந்த ஆட்சியாளர்களின் காலத்தில் உகந்தையில் புத்தர்சிலை நிறுவுதல் ஒரு இன மத விரோதச் செயலாகும்.
அத்துடன் நீண்டநாளாக தொடரும் சமய வழிபாட்டுத்தலங்களின் பிரச்சனைகளுக்கும் எந்த தீர்வையும் தராது அடாவடியினைச் செய்து வருகின்றது. திருகோணமலை கன்னியா சிவனாலய வழிபாட்டு முடக்கம், திருக்கோணேச்சர ஆலய காண்டாமணி நிறுவுவதற்கு அனுமதி மறுப்பு, வெடுக்கு நாறியமலையில் வழிபாட்டுக்குத் தடை, குருந்தூர் மலையில் தடையினைமீறிய புத்தவிகாரை, தையிட்டி சட்டவிரோத விகாரைப் பிணக்கைத் தீர்க்காமை என பலநூறு சமயத் தலங்களின் பட்டியல் நீள்கின்றது.
இவ்வாறான நில அபகரிப்பு பௌத்தமயமாக்கலை கண்டித்து திருகோணமலை வாழ் சமூக செயற்பாட்டாளர்களின் ஏற்பாட்டில் எமது நிலம் எமக்கு வேண்டும் என்ன தொனிப்பொருளில் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் காணி அபகரிப்பு மற்றும் இந்து ஆலயங்கள் மீதான அடக்குமுறையினைக் கண்டித்து திருகோணமலை சிவன்கோவிலுக்கு முன்பாக திங்கட்கிழமை (02.06.2025) கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது “வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம்”, “தமிழர் தொல்பொருளை சிதைக்காதே”, “சைவமத வழிபாட்டு உரிமையை உறுதிப்படுத்துக”, “கோயில் நிலங்களை அபகரிக்காதே” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியும், கோசங்களை எழுப்பியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உகந்தை முருகன் ஆலயம் தொடக்கம் வெருகல் கல்லடி மலை நீலி அம்மன் ஆலயம், திருகோணமலை கன்னியா ஆலயம் உட்பட பல சைவ ஆலயங்கள் பௌத்த மயமாக்கப்பட்டு வருகின்றது.
தொல்பொருள் திணைக்களத்தினால் தமிழர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகின்ற இடங்களில் எல்லாம் பௌத்த விகாரைகள் உருவாக்கப்பட்டு அந்த இடங்கள் பௌத்தமயமாக்கப்படுகின்றன எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவித்தனர்.
தொல்லியல் சின்னங்கள்
இது குறித்து கிழக்கு மாகாண திட்ட வரைபு ஒன்றியத்தின் மாகாண பொருளாரர் தட்சணாமூர்த்தி நவஜோதி தெரிவிக்கையில் , யுத்தம் நிறைவுற்ற பின்னர் பல ஆட்சியாளர்கள் மாறினாலும் அன்றில் இருந்து இன்று வரை பல சைவ ஆலயங்கள் பௌத்தமயமாக்கப்பட்டு வருகின்றன.
திருகோணமலையை பொறுத்தவரையில் வெருகல் கல்லடி பகுதியில் உள்ள சைவ ஆலயமான மலை நீலி அம்மன் ஆலயத்தினுள் பௌத்த மதத்தை நிறுவும் முகமாக புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று மூதூர் 64ஆம் கட்டை மலையில் பௌத்த விகாரை ஒன்று நிறுவப்பட்டு வருகின்றது. சைவ ஆலயங்கள் என்பது வாழ்வியலும் நம்பிக்கையுமாகும். தற்போது ஆட்சிக்கு வந்திருக்கின்ற அநுர அரசாங்கத்தின் ஆட்சியில் இவ்வாறான விடயங்கள் இடம்பெறாது என ஜனாதிபதி வாக்குறுதி வழங்கியிருந்தார்.
எனினும் அனுர அரசினுடைய ஆட்சியிலும் இது தொடர்ந்து வருகின்றது. அண்மையில் அம்பாறை மாவட்டத்தில் உகந்தை மலையில் வைக்கப்பட்டுள்ளது. எனினும் ஆலய நிர்வாகத்தினர் ஏற்கனவே அப்பகுதியில் 125 அடி உயரமான முருகன் சிலையை நிறுவுவதற்கு அனுமதி கோரியபோது அங்கிருந்த கடற்படையும், வன வள பாதுகாப்பு திணைக்களமும் அதனை தடுத்திருந்தனர்.
இந்நிலையில் திடீரென அவர்களின் முன்னிலையிலேயே அப்பகுதியில் தற்போது புத்தர்சிலை வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான விடயங்கள் தொடர்பில் கிழக்கு மாகாண திட்ட வரைபு ஒன்றியத்தின் சார்பாக ஜனாதிபதிக்கு மனு ஒன்றினை வழங்குவதற்கும் அதேபோன்று எதிர்வருகின்ற நாட்களில் கிழக்கு மாகாணத்தில் தொடரும் நில அபகரிப்பு மற்றும் பௌத்த மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்பாட்டங்களையும் நடத்துவதற்கு தயாராகி வருகின்றோம் எனவும்" தெரிவித்தார்.
அதேபோன்று குறித்த அமைப்பின் உறுப்பினர் கணபதிப்பிள்ளை இராசலிங்கம் என்பவர் கருத்து தெரிவிக்கும்போது,
'இந்த அரசு வந்த பின்னரும் வன இலாக திணைக்களம், தொல்லியல் திணைக்களம் உள்ளிட்ட அரச திணைக்களால் மக்களுடைய காணிகள் அபகரிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பாக வாகரை – நான்காம் கட்டை பிரதேசத்தில் வன இலாகா துறையினர் மக்களுடைய குடிசைகளை எரித்து அவர்களை வெளியேற்றுவதற்கான முனைப்புகளை காண்பித்திருந்தார்கள்.
அதேபோன்று சேருவில – தங்கநகர் கிராமத்தில் குடியிருப்பு காணி ஒன்றில் தொல்லியல் சின்னங்கள் இருப்பதாக குறிப்பிட்டு அதனை அபரிக்கவும் முயற்சித்து வருகின்றார்கள். அது மட்டுமல்லாமல் முத்துநகர் கிராமத்திலும் 22 பேரின் விவசாய காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழர்களின் பூமி
அதேபோன்று சம்பூர் பகுதியில் விவசாயிகளின் காணிகளை சோலார் மின்வலுத் திட்டத்திற்காக கையகப்படுத்தியுள்ளனர்.
இவற்றை எல்லாம் பார்க்கும்போது கடந்தகால அரசாங்கத்தைவிட இந்த அரசாங்கம் மிகவும் மோசமான முறையில் காணி அபகரிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இவ்வாறான நிலையில் கடந்த கோட்டாபய அரசாங்கத்திலும் கிழக்கு தொல் பொருள் செயலணி ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது இதில் திரியாய் அரிசி மலை பிரதம பௌத்த பிக்கு ஒருவரும் இதில் உள்ளடக்கப்பட்டிருந்ததுடன் பௌத்த விகாரைக்காக மக்களின் விவசாய காணிகளை ”பூஜா பூமி” என்ற போர்வையில் அபகரித்திருந்தார்.
இவருக்காக அரசாங்கம் மூலமாக வழங்கப்படும் மெய் பாதுகாவலர் கூட வழங்கப்பட்டிருந்தன. தற்போதைய ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களும் இவர்களுக்கான இடத்தை கொடுத்துள்ளதால் அப்பகுதியில் பௌத்தமயமாக்கல் அதிகரித்துள்ளது.
இது குறித்து இராவணா சேனா அமைப்பின் தலைவர் செந்தூரன் தெரிவிக்கையில் வடகிழக்கு தமிழர்களின் காணிகளை அபகரிப்பு செய்வதை வெளியுலகுக்கு காட்ட கவனயீர்ப்பினை முன்னெடுக்கிறோம் உகந்தை மலை தொடக்கம் குருந்தூர் மலை வரை கன்னியா, திருக்கோணேச்சரம் போன்ற இடங்களில் தொல்பொருள் திணைக்களம் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற அசௌகரியங்கள் மற்றும் வழிபாட்டு தளங்கள் தடுக்கப்படுகின்றன.
தமிழர்களின் பூமி பௌத்தமயமாக்கப்படுகிறது இதை அனுமதிக்க முடியாது என்றார். எந்த அரசாங்கம் ஆட்சிக்கு மாறி மாறி வந்தாலும் தங்களால் தேர்தல் காலங்களில் கொடுக்கப்படும் வாக்குறுதிகள் ஆட்சி அதிகாரத்தை பெற்றதன் பின் மறுதளிக்கின்றனர் தமிழ் மக்களுடைய வாக்குகளுக்காக பேரம் பேசும் சக்தியாக அவ்வப்போது இருந்தாலும் தமிழர் தாயகத்தில் இவ்வாறான நில ஆக்கிரமிப்புக்கான தீர்வு இல்லாமை கவலையளிக்கிறது.
பௌத்தமயமாக்கலுக்கு எதிராக போராட்டம் என்பது பொதுவாக ஒருவகை பாரம்பரிய, மத, சமூக, மற்றும் அரசியல் எதிர்ப்பு நடவடிக்கையாகும். தமிழர் பகுதிகளில், பௌத்த விகாரைகள் கட்டப்படுவது, அங்கு பௌத்தவாதம் வளர்க்கப்படுவது, இது பௌத்தமயமாக்கலாக பார்க்கப்படுகிறது.
இதற்கு எதிராக தமிழ் மக்கள், மதகுருக்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனை முடிவுக்கு கொண்டு வரமுடியாத உயிரை மாய்த்து தொடர் போராட்டங்கள் இடம் பெறுகின்றது.
இவ்வாறான நிலையால் பௌத்த அடையாளங்களை முன்னிலைப் படுத்தும் முயற்சிகள், பிற மதத்தினரிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது. வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் நில ஆக்கிரமிப்பு என்பது ஒரு மிக முக்கியமான அரசியல், சமூக மற்றும் இன அடையாளப் பிரச்சனையாக உள்ளது.
உரிமைகள் மீது தாக்கம்
இது, குறிப்பாக ஈழத் தமிழர்கள் அதிகம் வசிக்கும் இடமாக இருப்பதால், அவர்களின் பண்பாடு, வாழ்க்கைமுறை மற்றும் உரிமைகள் மீது தாக்கம் ஏற்படுத்துகிறது.
அரச துறை திணைக்களங்களால் சுற்றுலா மற்றும் பொருளாதாரத் திட்டங்கள் சில சந்தர்ப்பங்களில், "Tourism Development" என்ற பெயரில் அரசாங்கம் நிலங்களை கைப்பற்றி, பொதுமக்கள் வெளியேற்றப்படுகின்றனர்.
இதில் சர்வதேச முதலீடு, பௌத்த சுற்றுலா இடங்கள் போன்றவை முன்னிலைப்படுத்தப்படுகின்றன. ஆட்சி அதிகாரத்தை மாற்றும் நோக்கம் நிலங்களை மாற்றியமைப்பதன் மூலம் வாக்காளர்த் தொகை மாற்றப்படுகிறது.
இது எதிர்கால தேர்தல்களில் பெரும்பான்மை இன ஆதரவான முடிவுகளை ஏற்படுத்தும் வகையில் செயற்படப்படுகிறது. எது எவ்வாறாக இருந்தாலும் தமிழ் முஸ்லீம் மக்களது காணிகளை குறி வைத்து பௌத்தமயமாக்கல் இடம் பெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஒவ்வொரு மனிதனும் சுதந்திரமாகவும் உரிமைகளோடும் வாழ்வதற்கான வழி வகைகளை அரசாங்கம் செய்து கொடுப்பது அவர்களது கடமையல்லவா? எனவே நில அபகரிப்புக்கான தடைகளை ஒழிக்க போராட்டமற்ற விதத்தில் மாத்திரமல்ல சட்ட பூர்வமான வழி வகைகளையும் கையாள முயற்சிப்போமாக...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் H. A. Roshan அவரால் எழுதப்பட்டு, 10 June, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகையா இது! ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார்.. புகைப்படம் இதோ Cineulagam
