எனக்கு எந்த தொடர்பும் இல்லை! சுரேன் ராகவன்..
யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்து அழிக்கப்பட்டதற்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
தனது முகநூலில் இட்டுள்ள பதிவில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
போரின் போது உயிரிழந்த பல்கலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களை நினைவுகூரும் பொருட்டு யாழ். பல்கலை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி நேற்று முன்தினம் இரவு இடித்து அழிக்கப்பட்டது.
இதற்கு இலங்கை மற்றும் இந்தியா உள்ளிட்ட தமிழ் மக்கள் வாழும் புலம்பெயர் நாடுகளிலிருந்து பல்வேறு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் என பலரும் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.
குறித்த நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த இரண்டு நாட்களாக பல்கலை வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், யாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிக்கப்பட்ட விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவனுக்கு நேரடித் தொடர்பிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது.
இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் மேற்படி கருத்தை வெளியிட்டுள்ளார்.