இந்த நாடு ஒரு சிங்கள நாடு என்பதனை நான் ஏற்கவில்லை: க.வி.விக்னேஸ்வரன்
எந்தவிதத்திலும் உங்களால் இலங்கையை ஒரு சிங்கள அல்லது பௌத்த சிங்கள நாடாக அழைக்க முடியாது. இந்நாடு சிங்களம் பேசும் பெரும்பான்மையோர் வசிக்கும் பிரதேசங்களையும் தமிழ் பேசும் பெரும்பான்மையர் வசிக்கும் பிரதேசங்களையும் உள்ளடக்கிய நாடு என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நீதியரசருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்தவார கேள்வி பதில் தொகுப்பினூடாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த பதிவில்,
கேள்வி - சமீபத்தில் நாடாளுமன்றத்தில் 'தமிழர் தாயகம்' என்ற சொற்றொடருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதோடு அரச நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவற்றை ஹன்சார்டிலிருந்து நீக்குமாறும் கோரியிருந்தனர். அப்பொழுது மன்றுக்குத் தலைமை வகித்த நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் அதனை சபாநாயகரின் கவனத்திற்குக் கொண்டு வருவதாகத் தெரிவித்திருந்தார். கிளப்பப்பட்ட எதிர்ப்புகள் பற்றி அவர் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை. இந்த நாடு ஒரு சிங்கள நாடு என்பதனை நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா?
பதில் - இல்லை. நான் அவ்வாறு ஏற்கவில்லை. முதலில் இது ஒரு சிங்கள நாடல்ல. சிங்களவரைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு நாடே இது. ஆனால் வடக்கு, கிழக்கில் உள்ள பெரும்பான்மையானோர் தமிழ் பேசுபவர்கள். பிரித்தானியர் நிர்வாக நோக்கங்களுக்காக இந்நாட்டை 1833ம் ஆண்டில் ஒன்றாக்கிய பொழுது யாழ்ப்பாண இராச்சியம் ஒன்று வடக்கிலிருந்தது. மேலும் கிழக்கின் தமிழ் சிற்றரசர்கள் கண்டிய மன்னனுக்குத் திரை கட்டி வந்தனர்.
உங்களுக்குத் தெரியும் இறுதி கண்டிய மன்னன் தமிழனாக இருந்தது மட்டுமன்றி 1815ல் பிரித்தானியருடன் செய்த ஒப்பந்தத்தில் தமிழிலேயே கையொப்பம் இட்டிருந்தார். அதே போல கண்டிய சிங்களத் தலைவர்கள் சிலரும் அவ்வாறே செய்தனர். எந்தவிதத்திலும் உங்களால் இலங்கையை ஒரு சிங்கள அல்லது பௌத்த சிங்கள நாடாக அழைக்க முடியாது.
இந்நாடு சிங்களம் பேசும் பெரும்பான்மையோர் வசிக்கும் பிரதேசங்களையும் தமிழ் பேசும் பெரும்பான்மையர் வசிக்கும் பிரதேசங்களையும் உள்ளடக்கிய நாடு. 3000 வருடங்களுக்கு முன்னர் இந்நாட்டில் வாழ்ந்த பூர்வீக வாசிகள் தமிழையே பேசினர். அப்பொழுது சிங்கள மொழி என்ற ஒரு மொழி பிறந்திருக்கவில்லை. ஆகையால் அப்பொழுது சிங்களவர்கள் இருந்திருக்கவில்லை.
சிங்கள மொழியானது தமிழையும் பாளியையும் கொண்ட ஒரு கலப்பு மொழியாகும். தமிழ் மொழி மூலமாக சில சமஸ்ஹிருத சொற்கள் சிங்கள மொழியைச் சென்றடைந்தன. முதலாவது சிங்கள இலக்கண நூலான 'சிதத் சங்கரய' கி.பி.13ம் நூற்றாண்டளவில் தான் எழுதப்பட்டது.
சிங்கள மொழியானது 3000 வருடங்களுக்கு முன்னரே இருந்திருப்பின் அம்மொழி ஒரு இலக்கண நூலைப் பிறப்பிப்பதற்கு ஏன் 1700 வருடங்களை எடுத்தது? சிங்கள மக்கள் மகாவம்சத்தைத் தழுவிய பிழையான சரித்திர தகவல்களால் ஊட்டப்பட்டிருக்கின்றார்கள். மகாவம்சம் எழுதப்பட்ட பொழுது சிங்கள மொழியென ஒன்று உதித்திருக்கவில்லை.
ஆகையால்த் தான் மகாவம்சம் பாளி மொழியில் எழுதப்பட்டது. 'அத்தகதா' வும் கூட பாளி மொழியிலேயே எழுதப்பட்டது. கி.பி 5ம் நூற்றாண்டுக்கு முன்னர் சிங்கள மொழி நூல்களோ சிங்களக் கல்வெட்டுச் சான்றுகளோ எவையும் இதுவரை கண்டெடுக்கப்படவில்லை. மகாவம்சத்தின் ஆசிரியர் மகாநாம ஒவ்வொரு செய்யுளின் முடிவிலும் அதன் இறுதிப் பாடல் வரிகள் ஒவ்வொன்றிலும் பௌத்த சமயத்தின் பெருமையை வெளிப்படுத்துவதற்காகவே தம் நூலை எழுதியுள்ளதாகக் கூறியிருக்கின்றார்.
ஆகவே மகாவம்சம் ஒரு சரித்திர வலுக் கொண்ட நூல் அல்ல. கடந்த 73 வருட காலமாகச் சிங்கள அரசியல்வாதிகளும் சிங்கள புத்திஜீவிகளும் சிங்கள மொழியைப் பற்றியும் சிங்களவர் சரித்திரத்தைப் பற்றியும் திரிபு படுத்தப்பட்ட கருத்துக்களைத் தந்திரமாக வெளியிட்டு வந்துள்ளார்கள். கடந்த நூற்றாண்டின் அரை இறுதியில் உத்தியோகப்பூர்வமாக வடக்குக் கிழக்கில் காலங்காலமாக வழங்கி வரப்பட்ட தமிழ் இடங்களின் பெயர்கள் சிங்கள மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டன.
உதாரணமாக, பல நூற்றாண்டு காலமாக மணலாறு எனத் தமிழிலிருந்த பெயரானது வெலி ஓயா எனச் சுதந்திரத்தின் பின்னர் மாற்றப்பட்டது. (மணல் - வெலி – Sand, ஆறு – ஓய – River). இம்மொழிபெயர்ப்புகள் செய்யப்பட்டு சிறிது காலத்திற்குப் பின்னர் பௌத்த துறவிகளும் ஏனையோர்களும் வடகிழக்குப் பிரதேசங்களில் உள்ள பூர்வீகத் தமிழ்ப் பெயர்கள் ஆதியில் சிங்களப் பெயர்களாக இருந்தன எனவும் அவை பின்னர் தமிழுக்கு மாற்றப்பட்டன எனவும் கி.பி 10ம் நூற்றாண்டில் சோழர் ஆட்சிக் காலத்திலேயே தமிழ் மொழிக்கு மாற்றப்பட்டன எனவும் கூறத் தொடங்கினர்.
அதாவது தாம் தமிழிலிருந்து மொழி பெயர்த்த சிங்களச் சொற்களை முதலிலிருந்த சொற்களெனவும் ஆதித் தமிழ்ச் சொற்களைப் பின்னர் வந்த மொழி பெயர்ப்புக்கள் என்றும் கூறத் தலைப்பட்டனர். சிங்கள மொழி கி.பி 5ம் 6ம் நூற்றாண்டுகளில் தான் உருவாகியதால் 2000, 3000 வருடங்களுக்கு முன்னர் எப்படி சிங்கள மொழி இருந்திருக்க முடியும்? சமீபகாலத்தைய மொழிபெயர்ப்புகளுக்கு முன்னர் வடக்கு கிழக்கில் சிங்களப் பெயர்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் இல்லை.
ஆனால் பௌத்தத்தைச் சிங்கள மொழியுடன் இணைத்து எங்கெங்கெல்லாம் பௌத்த சின்னங்கள் இருக்கின்றனவோ அவை அனைத்தும் சிங்கள மக்கள் பூர்வீகமாகக் குடியிருந்த இடங்கள் என ஏமாற்றி வருகின்றனர். இது முற்று முழுதான ஒரு தவறு.
பேராசிரியர் சுனில் ஆரியரட்ண என்பவர் சில வருடங்களுக்கு முன் சிங்கள மொழியில் 'தெமள பௌத்தயோ' (தமிழ் பௌத்தர்கள்) என ஒரு நூலை எழுதியுள்ளார். எங்களுடைய நாட்டின் சரித்திரத்தில் தமிழர்கள் ஒரு காலப்பகுதியில் பௌத்தர்களாக இருந்தார்கள் என்பதை அவர் ஏற்றுக் கொண்டுள்ளார். அக் காலப்பகுதியில் சிங்கள மொழி இருந்திருக்கவில்லை.
ஆகவே தமிழ் பௌத்தர்கள் பெருவாரியாக வாழ்ந்த காலப்பகுதியில் சிங்களவர்கள் எவரும் வட கிழக்கிலிருந்திருக்கவில்லை. எனினும் சிங்கள இனவாத சரித்திர ஆசிரியர்களும் திட்டமிடும் பௌத்த துறவிகளும் கி.பி. 5ம் 6ம் நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்து பின்னர் சிங்கள மொழிக்கு வந்த பாளிச் சொற்களைக் குறிப்பிட்டு அவற்றைச் சிங்கள மொழி எனக் கூற முற்பட்டனர்.
அவை சிங்கள மொழிச் சொற்கள் அல்ல அவை பாளி மொழிச் சொற்கள்! பிற்காலப் பகுதியில் பாளி மொழிச் சொற்கள் ஒரு புதிய மொழிக்குள் புகுந்து அதை சிங்கள மொழி ஆக்க உதவின. கல்வெட்டுகளிலும் வேறு சாதனங்களிலும் காணப்படும் பாளி மொழிச் சொற்களை அடையாளம் கண்ட சிங்கள சரித்திர ஆசிரியர்கள் அவற்றைச் சிங்கள மொழி எனக் கூற முற்பட்டனர்.
ஆனால் அவை பிற்காலப் பகுதிகளில் சிங்கள மொழிக்குள் வந்த பாளி மொழிச் சொற்களேயாவன. 3000 வருடங்களுக்கு முன்னர் சிங்கள மொழி இருந்ததாகச் சில சிங்கள புத்த பிக்குகள் கூறி வருவதானது எப்படி இருக்கின்றதென்றால் நான் பிறப்பதற்குப் பல வருடங்களுக்கு முன்னர் இறந்த எனது பாட்டனாரின் காலத்தில் நான் இருந்திருக்கின்றேன் என்று கூறுவதற்கு ஒப்பானதாகும்.
நான் என் பாட்டனாரிலிருந்து வந்ததால் நான் என் பாட்டனார் காலத்திலிருந்தேன் என்பது போன்றே இவர்கள் வாதம் இருக்கின்றது. அதாவது பாளியிலிருந்து சிங்களம் வந்தது. எனவே பாளி இருந்த போது சிங்களமும் இருந்தது என்பதே இவர்கள் வாதம். ஆனால் இலங்கையை ஒரு தமிழ் இந்து நாடு எனக் குறிப்பிடுவதற்குரிய சாத்தியக்கூறுகள் பல உண்டு. சைவத் தமிழர்கள் தான் இந்தத் தீவின் பூர்வீகக் குடிகள்.
வடக்கில் கீரிமலையில் உள்ள நகுலேஸ்வரத்தில் உள்ள சிவலிங்கமும் வடமேற்கில் மன்னாரில் உள்ள திருக்கேதீஸ்வரமும் மேற்கில் சிலாபத்தில் உள்ள முன்னேஸ்வரமும் கிழக்கில் திருகோணமலையில் உள்ள கோணேஸ்வரமும் தெற்கில் தெய்வேந்திர முனையில் உள்ள தொண்டீஸ்வரமும் சரித்திரத்திற்கு முந்திய காலம் முதல் இந் நாட்டைப் பாதுகாத்து வந்தன என்பது ஐதீகம்.
வரலாற்று ரீதியாக அவை சரித்திர காலத்திற்கு முன்பிருந்தவை என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. பூர்வீகத் தமிழ் வாசிகளின் வழியிலேயே சிங்களவர்கள் வந்ததோடு தமிழிலிருந்து வந்த சிங்கள மொழியையும் கி.பி 5ம் 6ம் நூற்றாண்டு காலப்பகுதியில் ஏற்றுக் கொண்டார்கள். அவர்களுடைய மொழியானது தமிழோடு பாளியும் வேறு பேச்சு மொழிகளையும் உள்ளடக்கிய ஒரு கலவை. இப்பொழுது எந்த உண்மையான சரித்திர ஆசிரியரும் ஆரிய முற்றுகை இந்த நாட்டின் மேல் இருந்ததென்பதை நம்புவதில்லை.
மேற்கத்திய நாட்டினர் எமது சரித்திரத்தைத் தவறாக விளங்கியிருந்தனர். ஆரியன் என்ற சொல்லானது ஒரு இனத்தைக் குறிப்பிடவில்லை. ஆகையால் சிங்களவர்கள் தங்களை ஆரிய இனத்தினர் எனக் குறிப்பிட முடியாது. அவர்கள் 1500 வருடங்களுக்கு முன்னர் ஒரு புதிய மொழியை ஏற்றுக் கொண்ட உள்ளூர் தமிழர்கள் ஆவர். சிங்களவர்களும் தமிழர்களும் ஒரு பொது உற்பத்தியிலிருந்து வந்தவர்கள் என்பது சமீபத்தில் நடத்திய உயிரணு ஆராய்ச்சியில் (DNA) இருந்து நிரூபிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இப்பொழுது ஒரு புதிய மொழி தோன்றியுள்ளது. இன்னும் 25 தொடக்கம் 50 வருடங்களில் அது தமிழில் (Tamilish) எனத் தமிழும் ஆங்கிலமும் கலந்த ஒரு கலப்பு மொழியாக உருவாகும்.
இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகள் தமிழரின் தாயகமாக 3000 வருடங்களுக்கு மேல் இருந்து வந்துள்ளது. இதனை 1987ம் ஆண்டின் இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்றுள்ளது. ஆகவே 'தமிழர் தாயகம்' என்று பெரும்பான்மை தமிழர் வசிக்கும் இலங்கையின் வடக்கு கிழக்கை அழைப்பதில் எந்தப் பிழையும் இல்லை என தெரிவித்துள்ளார்.