விவாகரத்துகோரிய மனைவியை கடத்திய கணவர்
மட்டக்களப்பில் விவாகரத்துகோரி நீதிமன்றில் வழக்கு தாக்குதல் செய்த மனைவியை கணவர் கடத்தியுள்ளார்.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள ஜெயந்திபுரம் பிரசேத்திலே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வழக்கு தாக்குதல் செய்ததையடுத்து, மனைவி பெற்றோருடன் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் மனைவியை, கணவர் தனது பெற்றோருடன் வீடு புகுந்து முச்சக்கர வண்டியில் கடத்தி சென்றுள்ளார்.
நீதிமன்ற உத்தரவு
குறித்த பெண்ணின் கணவர், அவருடைய பெற்றோர் உட்பட 3 பேரையும் எதிர்வரும் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
ஜெயந்திபுரத்தில் வசித்து வந்த பெண் அதே பகுதியை சேர்ந்த ஆண் ஒருவரை கடந்த 6 மாதத்திற்கு முன்னர் திருமணம் செய்துள்ளார்.
கணவன் மனைவிக்கிடையான முரண்பாடு
இந்த நிலையில் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் மனைவி தமது கணவனை விட்டு பிரிந்து சென்றுள்ளார்.
இதனையடுத்து, மனைவி கணவனிடம் விவாகரத்துகோரி அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
சம்பவதினமான நேற்று காலையில் குறித்த பெண்ணின் வீட்டை பெண்ணின் கணவர் அவரது பெற்றோர் உட்பட 3 பேருடன் முச்சக்கரவண்டியில் சென்று முற்றுகையிட்டுள்ளார்.
தொடர்ந்து, பெண்ணின் தாயார் மற்றும் அவரது இரு சகோதரிகளை தாக்கிவிட்டு, பெண்ணை கடத்தி சென்று தனது வீட்டில் பூட்டி வைத்துள்ளார்.
இந்த தாக்குதலில் பெண்ணின் தாயார் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் நடவடிக்கை
இதேவேளை, பெண்ணின் சகோதரி 119 பொலிஸ் அவசர சேவைக்கு அழைத்து தனது சகோதரியை கடத்தி சென்றுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளார்.
தொடர்ந்து, மட்டு. தலைமையக பொலிஸார் பெண்ணை கடத்தி சென்றவர்களின் வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.
இதன்போது, கடத்தி சென்ற பெண்ணை பூட்டி வைத்திருந்த அறையிலிருந்து மீட்டுள்ளார்கள்.
மேலும், கடத்தலில் ஈடுபட்ட பெண்ணின் கணவரையும் அவரது பெற்றோரையும் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 3 பேரும் நேற்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
மேலும், அவர்களை எதிர்வரும் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.