ஹங்கேரி தேர்தல் களம்: ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுக்கும் 'அவர் ஹோம்லேண்ட்
ஹங்கேரியில் ஏப்ரல் 12ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில், வலதுசாரி 'அவர் ஹோம்லேண்ட்' கட்சி ஆட்சி அமைப்பதில் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுக்கும் எனப் புதிய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
பிரதமர் விக்டர் ஆர்பனின் 16 ஆண்டுகால ஆட்சியைத் தக்கவைக்க 'பிடெஸ்' கட்சி போராடி வரும் நிலையில், பீட்டர் மக்யார் தலைமையிலான 'டிஸ்ஸா' கட்சி சுயேச்சை ஆய்வுகளில் முன்னிலை பெற்றுள்ளது.
'21 ரிசர்ச் சென்டர்' மற்றும் 'சாவெக்ஸ் ரிசர்ச்' ஆகியவற்றின் ஆய்வுகளின்படி, நாடாளுமன்றத்தில் நுழைவதற்குத் தேவையான 5 சதவீத வாக்குகளைப் பெறும் தகுதி கொண்ட ஒரே சிறிய கட்சியாக 'அவர் ஹோம்லேண்ட்' மட்டுமே திகழ்கிறது.
குடியேற்ற எதிர்ப்பு
'அவர் ஹோம்லேண்ட்' கட்சி ஐரோப்பிய ஒன்றிய எதிர்ப்பு, குடியேற்ற எதிர்ப்பு மற்றும் தடுப்பூசி எதிர்ப்பு ஆகிய கொள்கைகளை முன்வைத்துத் தேர்தல் களம் காண்கிறது.
அக்கட்சியின் தலைவர் லாஸ்லோ டோரோக்ஸ்காய் தனது கட்சியைத் தீவிர வலதுசாரி என்று அழைக்கப்படுவதை மறுத்து, "இறையாண்மை கொண்ட கட்சி" என்று அடையாளப்படுத்துகிறார்.

இருப்பினும், இக்கட்சி வெளிப்படையாகவே யூத எதிர்ப்பு மற்றும் ரோமா சமூகத்திற்கு எதிரான வாக்காளர்களைக் கவர்ந்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
குறிப்பாக, கிராமப்புறங்களில் உள்ள சாதாரண மக்களின் ஆதரவும், கொவிட் காலத் தடுப்பூசி தொடர்பான சதித் திட்டக் கோட்பாடுகளை நம்புபவர்களின் ஆதரவும் இக்கட்சிக்கு வலுசேர்க்கின்றன.
ஹங்கேரி தேர்தல்
தற்போதைய நிலவரப்படி, '21 ரிசர்ச் சென்டர்' இக்கட்சிக்கு 5 சதவீத ஆதரவும், 'சாவெக்ஸ்' 4 சதவீத ஆதரவும் இருப்பதாகத் தெரிவித்துள்ளன.
பெரிய கட்சிகளான பிடெஸ் அல்லது டிஸ்ஸா ஆகியவற்றுடன் கூட்டணியில் சேரப்போவதில்லை என்று டோரோக்ஸ்காய் அறிவித்துள்ளார்.

ஆனால், ஒருவேளை விக்டர் ஆர்பன் பெரும்பான்மை இழக்கும் பட்சத்தில், அவரது சிறுபான்மை அரசுக்கு 'அவர் ஹோம்லேண்ட்' கட்சி வெளியில் இருந்து ஆதரவு அளிக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழல் ஏற்பட்டால், ஹங்கேரியின் அரசியல் எதிர்காலம் இந்தக் கட்சியின் கையிலேயே இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது.