யாழில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள்! சர்ச்சையாகியுள்ள விவகாரம்
யாழ்ப்பாணம், செம்மணிப் பகுதியில் அமைந்துள்ள அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்படுவது பல்வேறு சந்தேகங்களையும் அச்சத்தையும் தோற்றுவித்துள்ளது.
இந்த மயானத்தில் நல்லூர் பிரதேச சபையால் மின் தகன எரியூட்டி அமைப்பதற்கான பூர்வாங்க வேலைகள் முன்னெடுக்கப்பட்டன.
அதற்கமைய மயானத்துக்குள் கிடங்குகள் வெட்டியபோது இந்த எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று தெரியவருகின்றது.
ஒப்பந்த நடவடிக்கை
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
காணொளி - தீபன்
சித்துப்பாத்தி இந்து மயானத்துக்குள் மின் தகன எரியூட்டி அமைப்பதற்கான பணி நல்லூர் பிரதேச சபையால் ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய எரியூட்டி அமைப்பதற்காகக் கிடங்கு வெட்டியபோது மண்டையோடு உட்பட்ட மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் அவதானிக்கப்பட்டு்ள்ளன.
இதனையடுத்து ஒப்பந்தக்காரர்களால் நல்லூர் பிரதேச சபைக்கு இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக சம்பவ இடத்துக்கு வருகை தந்த பிரதேச சபைச் செயலர் உள்ளிட்ட தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், சித்துப்பாத்தி மயான அபிவிருத்திப் பணி உறுப்பினர்கள் ஆகியோர் மனித எலும்புக்கூட்டு எச்சங்களைப் பார்வையிட்டனர்.
எனினும், மின் தகன எரியூட்டி அமைப்பதற்கான வேலைகளைத் தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு ஒப்பந்தக்காரர்களுக்குப் பிரதேச சபைச் செயலர் உள்ளிட்ட தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் வலியுறுத்தினர்.
எலும்புக்கூட்டு எச்சங்கள்
இந்நிலையில், இந்து மயானத்துக்குள் மனித எலும்புக்கூடுகள் காணப்படுவதால் தம்மால் தொடர்ந்தும் பணியாற்ற முடியாது என்று ஒப்பந்தக்காரர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து ஒப்பந்தக்காரர்களுடனான ஒப்பத்தத்தை இடைநிறுத்திய பிரதேச சபை செயலாளர், மயான அபிவிருத்தி சபையிடம் இது குறித்து தெரிவித்ததுடன் குறித்த ஒப்பந்தத்தின் தொடர் பணிகளை முன்னெடுக்குமாறு கேட்டுள்ளார்.
இதனால் அச்சமடைந்த மயான அபிவிருத்திக் குழுவினர் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் ஆலோசித்து வருகின்றனர்.
அந்தப் பகுதியில் மூன்று குழிகள் வெட்டப்பட்ட நிலையில் இரண்டு குழிகளில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் அவதானிக்கப்பட்டதையடுத்து ஒப்பந்தக்காரர்கள் தங்கள் பணிகளை நிறுத்தியுள்ளனர்.
இதேவேளை, குறித்த பகுதியில் மீட்கப்பட்டுள்ள மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் செம்மணிப் படுகொலையில் கொல்லப்பட்டவர்களுடையதாக இருக்கலாம் அல்லது புதைக்கப்பட்ட கிறிஸ்தவர்களுடையதாக இருக்கலாம் என்ற சந்தேகங்களும் வெளிப்படுத்தபடுகின்றன.
இந்த மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் எப்படி எங்கிருந்து வந்தன என்பது தொடர்பில் பலரும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |