கடமை தவறியமை! பொலிஸ் அதிபர்,இராணுவத்தளபதியை விசாரிக்கவுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு!
இலங்கையில் நேற்று மே 09ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக இராணுவத்தளபதியும், பொலிஸ் மா அதிபரும் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளனர்.
நாளை மறுநாள் 12ஆம் திகதி ஆணைக்குழுவில் பிரசன்னமாகுமாறு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இடம்பெற்ற வன்முறைகளின்போது அவற்றை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த தவறியமை தொடர்பில் விளக்கமளிக்குமாறு கோரியே பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்கிரமரட்னவும், இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவும் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்
ஏற்கனவே ரம்புக்கனையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு கொலை தொடர்பில் பொலிஸ் அதிபர், ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்ட பின்னரே அது தொடர்பிலான உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு குற்றம் சுமத்தப்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டனர்
இந்தநிலையில் நேற்றைய சம்பவத்தை பொறுத்தவரையில் அது அலரி மாளிகையில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான கூட்டத்தின் பின்னரே கட்டவிழ்த்து விடப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன் மகிந்தவின் ஆதரவாளர்கள் காலி முகத்திடலின் பண்டாரநாயக்க சிலை பிரதேசத்துக்கு செல்லும் வரையில் பொலிஸ் அல்லது இராணுவத்தின் தலையீடு இருக்கவில்லை என்பதை காணொளிக்காட்சிகள் சாட்சியப்படுத்தியுள்ளன.