ஹோர்முஸ் நீரிணை மோதல்: அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் எச்சரிக்கைக்கு ஈரான் கடும் பதிலடி!
பதற்றம் நிலவிவரும் ஹோர்முஸ் நீரிணையின் முழுக் கட்டுப்பாடும் தமது வசமே இருக்கும் எனவும், அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு ஒருபோதும் பணியப் போவதில்லை எனவும் ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை அடுத்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் தலைவர்களைக் கடுமையாக விமர்சித்திருந்தார்.
ஈரான் மீதான பொருளாதாரத் தடை
நேட்டோ மாநாட்டில் பங்கேற்பதற்காகத் துருக்கி சென்றுள்ள ஜனாதிபதி ட்ரம்ப், கடந்த மாதம் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு உடன்படிக்கை முறிவடைந்துள்ளதாக பிரகடனப்படுத்தியுள்ளார்.
அத்துடன், ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளில் வழங்கப்பட்டிருந்த சலுகைகளையும் அவர் ரத்துச் செய்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, நேற்றுப் புதன்கிழமை அதிகாலை தெற்கு ஈரான் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
இதற்குப் பதிலடியாக, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையும் இராணுவமும் பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளை இலக்கு வைத்து ஏவுகணைகளை ஏவியதுடன், அமெரிக்காவின் உளவு ட்ரோன் விமானம் ஒன்றையும் சுட்டு வீழ்த்தியுள்ளன.
பாதுகாப்பு மற்றும் இறையாண்மை தொடர்பான உடன்படிக்கை விதிகளையும், போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் அமெரிக்காவே முதலில் மீறியுள்ளதாக ஈரானின் வெளிவிவகார அமைச்சு குற்றம் சுமத்தியுள்ளது.
சர்வதேசக் கப்பல் போக்குவரத்து
இரு நாடுகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையின் 5 ஆம் பிரிவை, இரு தரப்பும் வெவ்வேறு கோணங்களில் அர்த்தப்படுத்தியமையே இந்த புதிய மோதலுக்கு பிரதான காரணமாகும்.
இந்த உடன்படிக்கையின் பிரகாரம் ஹோர்முஸ் நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்தை முறைப்படுத்தும் முழுக் அதிகாரமும் தமக்கே உரியது என ஈரான் நாடாளுமன்றக் குழுவின் ஊடகப் பேச்சாளர் எப்ராஹிம் அசிசி தெரிவித்துள்ளார்.

ஆனால், சர்வதேசக் கப்பல் போக்குவரத்துக்கு ஈரான் முட்டுக்கட்டை போடக் கூடாது என்பது மட்டுமே உடன்படிக்கையின் விதி எனவும், போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் ஈரானுக்கு வழங்கப்படவில்லை எனவும் அமெரிக்கா வாதிடுகின்றது.
இதேவேளை, ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் ஈராக்கிலும் ஈரானிலும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதால், இந்த வார இறுதி வரை புதிய பேச்சுவார்த்தைகள் எதற்கும் வாய்ப்பில்லை எனத் தெரியவருகிறது.
எனினும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராகப் பழிவாங்கப் போவதாக ஈரானிய இராணுவத் தளபதிகள் எச்சரித்துள்ளனர். இந்தத் திடீர் பதற்ற நிலைமை காரணமாக சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 76 டொலர்களைத் தாண்டி அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.