யாழில் வீடு புகுந்து கொள்ளை - நால்வர் படுகாயம்
யாழில் கொள்ளை கும்பல் ஒன்று வீடு புகுந்து வீட்டிலிருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு தங்க நகைகளை கொள்ளையிட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் மூன்று பெண்கள் உள்ளிட்ட நால்வர் காயமடைந்துள்ளனர்.
சுன்னாகம், கந்தரோடை பகுதியில் இன்று அதிகாலை 3 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கந்தரோடை, சங்காவத்தை பகுதியில் முகங்களை மறைத்தவாறு கோடாரி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீட்டின் முன் கதவை உடைத்துக் கொண்டு கொள்ளையர்கள் வீட்டினுள் புகுந்துள்ளனர்.
வீட்டில் அறை ஒன்றில் தூங்கிக்கொண்டிருந்த கணவன், மனைவியை அச்சுறுத்தி மனையின் நகைகளை கொள்ளையிட முயன்ற போது அதற்குக் கணவன் எதிர்ப்பு தெரிவித்த வேளை கணவன் மீது கோடாரி உள்ளிட்டவற்றால் தாக்குதல் நடத்தியதுடன் மனைவி மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அதனால் அவர்கள் அபாய குரல் எழுப்பிய போது, குறித்த பெண்ணின் தயாரான வயோதிப பெண் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அதேவேளை குறித்த பெண்ணின் கழுத்தை நெரித்து அவர் அணிந்திருந்த மூன்று பவுண் பெறுமதியான தங்கச் சங்கிலி , ஒன்றரை பவுண் கை சங்கிலி , இரண்டு மோதிரம், காப்புக்கள் என்பவற்றை கொள்ளையிட்டுள்ளனர்.
அதேவேளை வீட்டின் மற்றுமொரு அறையில் தூங்கிக்கொண்டிருந்த குறித்த பெண்ணின் சகோதரி சத்தம் கேட்டு வெளியே வந்த போது அவரை மிரட்டி, தாக்கி அவர் அணிந்திருந்த தங்கச்சங்கிலி, மோதிரம், காப்பு என்பவற்றையும் கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
தப்பிச் செல்லும் போது வீட்டாரின் தொலைபேசிகளை பறித்துச் சென்று வீட்டிலிருந்து சற்று தொலைவில் உள்ள ஆட்களற்ற காணிக்குள் வீசி விட்டுச் சென்றுள்ளனர்.
கொள்ளையர்கள் தப்பிச் சென்றதும், பாதிக்கப்பட்டவர்கள் அயலவர்கள் உதவியுடன் சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்ததுடன், பொலிஸ் மோப்ப நாய் பிரிவுக்கு அறிவித்து விசாரணைகளைத் துரிதப்படுத்தியுள்ளனர்.
மோப்ப நாயின் உதவியுடன் , வீட்டுக்கு அருகிலிருந்த காணிக்குள் இருந்து வீட்டாரின் கைத்தொலைபேசிகள் மீட்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து மோப்ப நாயின் உதவியுடன் வீட்டிலிருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் வசிக்கும் மூவரை மோப்ப நாய் அடையாளப்படுத்தியதன் அடிப்படையில் பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களையும் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.