அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் பிரகடனம்! ஆக்ரோஷமான போராட்டங்கள் தொடர்பில் எச்சரிக்கை
1955ஆம் ஆண்டின் உத்தியோகபூர்வ இரகசியச் சட்டத்தின் கீழ் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போதும், அது முக்கியமான அரச கட்டடங்கள் அமைந்துள்ள வீதிகளில் எவரும் பயணிப்பதைத் தடுக்காது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
இந்த சட்டம் முக்கியமான அரச நிறுவனங்களின் பாதுகாப்புக்காக தகவல்கள் கசிவதைத் தடுப்பதற்கான ஏற்பாடுகளை மட்டுமே வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்தியாளர் சந்திப்பொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
தவறான விளக்கம்
அவர் மேலும் தெரிவிக்கையில், இது தொடர்பில் அரசாங்கம் தவறான விளக்கத்தை வழங்கியுள்ளது. ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, பிரதமர் அலுவலகம் மற்றும் அலரி மாளிகைக்கு செல்லும் வீதிகள் மற்றும் துணை வீதிகளுக்குள் நுழைவதைத் தடுப்பதற்காகவே அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
வேறுவிதமாகக் கூறினால், பொதுமக்கள் அந்த இடங்களுக்குள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அனுமதி பெற வேண்டும் என்ற விதி
எனினும் கோட்டகோகாம மற்றும் மைனாகோகாம போன்ற போராட்டத்தளங்கள் பகுதிகளுக்கு செல்வதற்கு அனுமதி பெற வேண்டும் என்ற எந்த விதிகளையும், 1955ஆம் ஆண்டின் உத்தியோகபூர்வ இரகசிய சட்டம் வழங்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் உயர் பாதுகாப்பு வலயங்கள் பிரகடனம் எதிர்காலத்தில் மேலும் ஆக்ரோஷமான போராட்டங்களை உருவாக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.