ராஜ்யசபாவில் வைகோவிற்கும் வெங்கையா நாயுடுவிற்கும் இடையில் கடும் வாக்குவாதம்
ராஜ்யசபாவில் நேற்றைய தினம் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவிற்கும் ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடுவிற்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
ராஜ்யசபாவில் நேற்றைய தினம் வைகோ உரையாற்றிக்கொண்டிருக்கும் போது 'பேசுவதற்கு பதிலாக வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள்; விதிகளின்படி இது பொருந்தாது. நீங்கள் பேசும் எதுவுமே, சபைக்குறிப்புகளில் ஏறாது,'' என ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளதன் காரணமாக சபையில் சற்று குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது ராஜ்யசபாவில் ம.தி.மு.க., - எம்.பி., வைகோ உரையாற்றிய உரை பின்வருமாறு,
தென் மாநில எம்.பி.,க்களுக்கு வரும், மத்திய அரசின் அனைத்து கடித போக்குவரத்துகளும் ஹிந்தியில் தான் உள்ளன.ஹிந்தி பேசாத மாநிலங்களின் மீதான மத்திய அரசின் ஆதிக்கத்தை இது காட்டுகின்றது.
மத்திய அரசின் கொள்கைகள், திட்டங்கள் என எல்லாமே, ஹிந்தியில் மட்டுமே இருப்பதால் ஒன்றுமே புரிவதில்லை. இதற்காக கோடிக்கணக்கில் வரிப்பணத்தை மத்திய அரசு செலவழிக்கிறது.
ஆங்கிலத்தை பின்தள்ளும் போக்கை ஏற்க முடியாது. அனைத்து மாநில மொழிகளையும், மத்திய அரசின் நிர்வாக நடைமுறைகளில் சேர்க்க வேண்டுமென்ற கோரிக்கை இருந்து வருகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வைகோ தனது கையில் வைத்திருந்த குறிப்புகளை பார்த்து பேசிக் கொண்டிருக்கும் போது, சபை தலைவர் வெங்கையா நாயுடு இடைமறித்து ,நீங்கள் சொல்ல வந்ததை சொல்லி விட்டீர்கள்; போதுமானது. நீங்கள் பேசுவதற்கு பதிலாக வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள்.விதிகளின்படி இது பொருந்தாது. நீங்கள் பேசும் எதுவுமே, சபைக்குறிப்புகளில் ஏறாது. இதையும் உங்களது வசதிக்காக ஆங்கிலத்திலேயே குறிப்பிடுகின்றேன் என்றும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து வைகோ குறிப்புகள் இல்லாமல் பேசத் துவங்கிய நிலையில், அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டமையினால் சில நிமிடங்கள் சபையில் பரபரப்பு நிலவியுள்ளது.