நாடாளுமன்றிற்கு களங்கம் கற்பித்தமைக்காக வருந்துவதாக பகிரங்கமாக கூறிய அமைச்சர்
நாடாளுமன்றில் அண்மைய நாட்களாக இடம்பெற்ற சம்பவங்களுக்காக வருந்துவதாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் அவர் இந்த விடயத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அண்மைய நாட்களில் நாம் அனைவரினாலும் இந்த உயரிய சபைக்குக் களங்கம் ஏற்படும் வகையிலான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆளும் கட்சியினாலும், எதிர்க்கட்சியினாலும் நாடாளுமன்றிற்கு இழிவு ஏற்படக்கூடிய வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.
தேசிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களுக்கு முன்னுரிமை அளிக்காது சில்லறைத்தனமான விடயங்களைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருப்பதே இதற்கான காரணம்.
நாடாளுமன்றில் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், ஒருவருக்கு ஒருவர் மதிப்பளிக்க வேண்டும் எனவும் எனினும் தற்பொழுது அவ்வாறான ஓர் நிலையை காணமுடியவில்லை எனவும் அவர் வருத்தம் வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றின் உன்னதத்தைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ள நிலையியற் கட்டளைகளைத் துல்லியமாக அமுல்படுத்துமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.