அரசாங்கம் விழும் வரை காத்திருக்காமல் மக்கள் வீதிக்கு இறங்க வேண்டும்! ஐக்கிய மக்கள் சக்தி அறைகூவல்
இந்த அரசாங்கம் தானாகவே வீழும் வரை பார்த்துக் கொண்டிருக்காமல், நாட்டின் ஜனநாயகத்தையும் உரிமைகளையும் பாதுகாக்க மக்கள் அனைவரும் உடனடியாக வீதியில் இறங்கித் தலைமைத்துவத்தை ஏற்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா வலியுறுத்தினார்.
கம்பஹாவில் நேற்றைய தினம் (26.08.2026) நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயகப் போராட்டம்
அவர் மேலும் தெரிவிக்கையில், அரசை மாற்ற வேண்டும் என பெரும்பான்மையான மக்கள் விரும்பிய போதிலும், அதனை யாராவது ஒருவர் செய்து தருவார்கள் என வீட்டில் காத்திருப்பது நடைமுறைக்குச் சாத்தியமற்றது. ஜனநாயகப் போராட்டத்தில் மக்களே நேரடியாகக் களமிறங்க வேண்டும்.
தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் எதனையும் தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றவில்லை. மின்சாரக் கட்டணம் மற்றும் எரிபொருள் விலையைக் குறைத்தல், நெல்லுக்கு 150 ரூபா நியாயமான விலை வழங்குதல் மற்றும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்தல் போன்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

அவல நிலை
இதனால் இன்று விவசாயிகள் நெல்லை 95 ரூபாவுக்கே விற்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். நாட்டில் நீதித்துறை மீது அழுத்தங்களைப் பிரயோகித்து அதனை அரசியல்மயமாக்குவதன் மூலம், வடகொரியாவை போன்ற ஒரு கட்சி மட்டுமே ஆட்சி செய்யும் சர்வாதிகார போக்கை நோக்கி அரசாங்கம் நகர முற்படுகின்றது.
மக்கள் பிரதிநிதிகளோ அரச நிறுவனங்களின் தலைவர்களோ சுயாதீனமாகச் செயற்பட முடியாமல், பெலவத்தையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பிரதிநிதிகளின் உத்தரவுகளுக்கேற்பவே அனைத்துப் பணிகளும் நடைபெறுகின்றன.
எனவே, நாட்டில் ஜனநாயகம் முற்றாக அழிந்துபோவதைத் தடுக்கவும், சர்வாதிகார ஆட்சியை வீழ்த்தவும் பொது மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் உடனடியாக ஒன்றுபட வேண்டும் என்றார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 11 Evening