ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் தேங்கியுள்ள 1,000க்கும் அதிகமான வாகனங்கள் ஏலத்தில்
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் மூன்று மாதங்களுக்கும் மேலாக விடுவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 1,000-க்கும் மேற்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் அல்லது டெண்டர் முறையில் விற்பனை செய்து, சுங்க வரி மற்றும் களஞ்சியக் கட்டணங்களை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 109 ஆவது பிரிவின் கீழ் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும், இது குறித்து இறக்குமதியாளர்களுக்குத் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுங்கத் திணைக்கள ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா கூறியுள்ளார்.
வாகன இறக்குமதி மூலம் கிடைக்கும் சுங்க வரி வருவாயில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், சுங்கத் திணைக்களத்தின் மொத்த இலக்கான 190.2 பில்லியன் ரூபாயில் இதுவரை 176.7 பில்லியன் ரூபாய் திரட்டப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய 13 பில்லியன் ரூபாயை வரும் நாட்களில் ஈட்ட முடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.

வாகன வரி வருவாய் குறைந்ததையடுத்து, கூடுதல் கட்டணத்தை இந்த ஆண்டின் இறுதி வரை நீடிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் வாகன இறக்குமதி மீண்டும் இயல்பு நிலைக்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
செலாவணி வீத உயர்வு வாகனங்களின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் 1,000-க்கும் அதிகமான வாகனங்கள் சுமார் மூன்று மாதங்களாக விடுவிக்கப்படாமல் தேங்கியுள்ளன. சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 109 ஆவது பிரிவின் கீழ், இந்த வாகனங்களை ஏலம் அல்லது டெண்டர் மூலம் விற்பனை செய்து சுங்க வரியை முதன்மையாக வசூலிக்கவும், பின்னர் துறைமுகத்திற்கான களஞ்சியக் கட்டணங்களைச் செலுத்தவும் தீர்மானித்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
விற்பனைக்குப் பின்னர் ஏதேனும் பணம் மீதம் இருந்தால், அதை சம்பந்தப்பட்ட இறக்குமதியாளருக்குத் திருப்பி வழங்கவும் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாக இறக்குமதியாளர்களுக்குத் தெளிவுபடுத்தும் பணிகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 11