குற்றத்தை ஒப்புக் கொண்ட ஹர்ஷ இலுக்பிட்டிய! தண்டனைக்கான திகதி அறிவிப்பு
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் முன்னாள் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய, நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டை எதுவித நிபந்தனைகளும் இன்றி ஒப்புக் கொண்டுள்ளார்.
இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படும் இலத்திரனியல் வீசா தொடர்பில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறி தனியார் நிறுவனமொன்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டமை தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் முன்னாள் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய சுமார் ஒரு வருட காலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மீண்டும் விளக்கமறியல்
இந்நிலையில் இன்றைய தினம் அவருக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் தன் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டை நிபந்தனையின்றி ஏற்றுக் கொள்வதாக அவர் அறிவித்துள்ளார்.
இதனையடுத்து அவருக்கான தண்டனை குறித்து இம்மாதம் 24ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுவரை ஹர்ஷ இலுக்பிட்டியவை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.