இலங்கையின் கையிருப்பில் உள்ள அமெரிக்க டொலர்கள் தொடர்பில் வெளிச்சத்திற்கு வந்த தகவல்!
இலங்கையில் தற்போது 2581 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மாத்திரமே கையிருப்பிலுள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா(Harsha de silva) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் 2021ஆம் ஆண்டு நடுப்பகுதியின் நிதி நிலைமைகள் தொடர்பான அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு விவாதம் நேற்று இடம்பெற்றது. இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
தற்போது நாட்டின் அரச நிதி குறித்த பாரிய நெருக்கடி நிலையொன்று காணப்படுகின்றது, 2021ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் ஜூலை மாதம் வரையில் அரசின் மொத்த வருமானமானது 79 ஆயிரத்து 800 கோடியாகும். ஆனால் மொத்த செலவீனமானது ஒரு இலட்சத்து 150 கோடி ரூபாவாகும்.
கொரோனா காரணங்களை கூறினாலும், 2009 ஆம் ஆண்டு இடைவெளியானது 522பில்லியனாக இருந்தது, எனினும் தற்போது வரவு செலவு திட்ட இடைவெளி 94 வீதத்தால் அதிகரித்துள்ளது. இது குறித்து கவனம் செலுத்த வேண்டும்.
அதுமாத்திரமன்றி, அதற்கான தீர்வுகளை எவ்வாறு காண்பது என்பது குறித்தும் கவனம் செலுத்தியாக வேண்டும், தேசிய மற்றும் சர்வதேச கடன்களை சமாளிக்க இந்த குறித்த காலகட்டத்தில் மாத்திரம் 54ஆயிரத்து 900 கோடி ரூபா அச்சடிக்கப்பட்டுள்ளது. இதில் கருப்பு வெள்ளை பணமும் உள்ளடங்கும்.
எமது ஆட்சியின் போது நாம் கடன்களை பெற்றுக்கொண்டுள்ளோம் என விமர்சிக்கின்றனர். ஆம் நாம் கடன்களை பெற்றுக்கொண்டோம் என்பது உண்மையே, எமது ஆட்சியில் அறுபது மாதங்களுக்கு 5400 பில்லியன் ரூபா கடன்களை பெற்றிருந்தோம். எனினும் கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் ஆட்சிக்கு வந்த காலத்தில் இருந்து இந்த ஆண்டு ஜூலை மாதம் வரையில் 3750 பில்லியன் ரூபா கடன்களை பெற்றுள்ளது.
நாம் அறுபது மாதங்களுக்கு நாம் பெற்ற கடன்களை இவர்கள் 18 மாதங்களில் நெருங்கியுள்ளனர். ஆகவே தலா நபரின் கடன்களில் மேலதிகமாக 1 இலட்சத்து 87 ஆயிரத்து 500 ரூபாவால் அதிகரித்துள்ளனர். இவர்களின் ஆட்சியில் விலை குறையும் என மக்கள் நினைத்தாலும் அதற்கு மாறாகவே இடம்பெற்றது.
இந்தநிலையில் அவசியமான துறைகளுக்கு வரிகளை செலுத்தாது சலுகைகளை கொடுத்துள்ளனர். குறிப்பாக கெசினோவில் இருந்து கிடைக்க வேண்டிய 267 கோடி ரூபா அரசாங்கம் இணைத்துக்கொள்ளவில்லை என கோப் குழு தெரிவித்துள்ளது.
கோடிஸ்வரர்களுக்கு சலுகைகளை கொடுத்து அப்பாவி மக்களின் வயிற்றில் அடித்துள்ளது இந்த அரசாங்கம். இன்று எமது வெளிநாட்டு கையிருப்பு 28வீதத்தால் குறைவடைந்துள்ளது.
கடந்த காலங்களை மாத்திரம் விமர்சித்துக்கொண்டு இருக்காது டொலர் பெறுமதியை தக்கவைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்த 12 மாதங்களில் செலுத்த வேண்டிய மொத்த சர்வதேச கடனானது 7242 மில்லியன் டொலர்களாகும். ஆனால் எமது கையிருப்பில் 2581 மில்லியன் அமெரிக்க டொலர்களே உள்ளது. ஏனைய தொகைக்கு நாம் என்ன செய்யப்போகின்றோம். இதற்கு அரசாங்கம் பதில் தெரிவிக்க வேண்டும்.
இந்த கடன்களை செலுத்த அங்கீகாரம் இல்லாத, அடையாளம் இல்லாத நபர்களை கொண்டு கடன்களை பெற்றுக்கொள்ள அரசாங்கம் அமைச்சரவையில் அனுமதித்துள்ளது. அதற்கு மேலதிகமாக ஓமானில் இருந்து கடன்களை கேட்டும் அவர்கள் அதனை அனுமதிக்கவில்லை. மாறாக மன்னார் எண்ணெய் வளத்தில் ஒரு பங்கினை கேட்டுள்ளனர் என்றார் .