ஹிட்லர் – சார்லி சாப்ளின் என்று இல்லாமல் ஒரே கதாபாத்திரமாக இருந்து செயற்படுங்கள்! ஹரின் வேண்டுகோள்
ஹிட்லராகவும், சார்லி சாப்ளினாகவும் இரண்டு கதாபத்திரங்களாக இருக்காது, ஒரே கதாபாத்திரமாக இருந்து செயற்படுமாறு ஆட்சியாளர்களைக் கேட்டுக்கொள்கின்றேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், 1889 இல் பிறந்த ஹிட்லரும், சார்லி சாப்ளினும் ஒரே மாதிரியாக மீசையைக் கொண்டவர்களாகவே இருந்தனர்.
ஆனால், ஒருவர் உலகை அழ வைத்ததுடன் ஒருவர் உலகையே சிரிக்க வைத்தார். அதேபோன்ற இரண்டு கதாபாத்திரங்கள் தற்போது இலங்கையின் ஆட்சிப்பீடத்திலும் உள்ளது.
நான் கூறுவது நந்தசேன கோட்டாபய ராஜபக்சவைதான் என்று யாரும் நினைத்தால் அதற்காக மன்னித்துக்கொள்ளுங்கள்.
எவ்வாறாயினும் நாட்டில் ஹிட்லர், சார்லி சாப்ளின் போன்று இல்லாமல் ஒரே பாத்திரமாக நடந்துகொள்ளுங்கள் என்பதே எனது கோரிக்கையாக இருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.