பதவி விலகும் ஹரின்-நியமிக்கப்படும் சாகல ரத்நாயக்க
இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்கவை நியமிக்க அந்த கட்சியின் முகாமைத்துவச் சபை தீர்மானித்துள்ளது.
பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த ஹரின்
ஐக்கிய தேசியக்கட்சி தலைவரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற கட்சியின் முகாமைத்துவச் சபைக்கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக பதவி வகிக்கும் சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டுள்ளதுடன் தான் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக கூறியுள்ளார்.
அடுத்த வாரம் நியமிக்கப்படும் சாகல ரத்நாயக்க
இதனால், புதிய தலைவரை நியமிக்குமாறும் அறிவித்துள்ளார். இதற்கு அமைய ஜனாதிபதியின் பணிக்குழுவின் தலைவரும் ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளருமான சாகல ரத்நாயக்கவை சங்கத்தின் தலைவராக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த வாரம் ஹரின் பெர்னாண்டோ பதவியில் இருந்து விலகிய பின்னர்,சாகல ரத்நாயக்க, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக நியமிக்கப்பட உள்ளர்.
இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் ஐக்கிய தேசியக்கட்சியின் பழைய தொழிற்சங்கங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)