நிலைபேறான அபிவிருத்தி இதுவே அவசியம்..! ஹரிணி அமரசூரிய சுட்டிகாட்டு
அரசியல் மற்றும் சமூக மாற்றங்களை ஒரே நாளில் ஏற்படுத்த முடியாது என்றும், அர்த்தமுள்ள மற்றும் நிலையான மாற்றங்களை உருவாக்குவதற்குப் பொறுமை, பரஸ்பர பேச்சுவார்த்தை மற்றும் தொடர்ச்சியான மக்கள் பங்களிப்பு என்பன இன்றியமையாதவை என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பிரிட்டனுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர், கடந்த மே 19ஆம் திகதி உலகப் புகழ்பெற்ற ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விசேட விரிவுரையில் முதன்மை அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நிலைபேறான அபிவிருத்தி
ஒக்ஸ்போர்ட் உலகளாவிய மற்றும் பிராந்திய கற்கைகள் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மாநாட்டில், "அபிவிருத்தியின் அரசியல்: இலங்கையும் அதற்கு அப்பாலும்" என்ற பொருளில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய விவரங்கள் வருமாறு, அபிவிருத்தி என்பதை வெறும் உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள், அரசாங்கக் கொள்கைகள் மற்றும் பொருளாதார மாதிரிகளின் ஊடாக மட்டுமே அளவிட்டுப் புரிந்துகொண்டுவிட முடியாது.

அது மக்களின் அன்றாட வாழ்வியல் அனுபவங்களின் ஊடாகவே நோக்கப்பட வேண்டும். கடுமையான பொருளாதார நெருக்கடிகள், நிறுவன ரீதியான சவால்கள் மற்றும் நீண்டகால சமூகச் சமத்துவமின்மைகளிலிருந்து மீண்டு வரும் ஒரு நாட்டில், கொள்கைத் திட்டமிடல்களையும் அடிமட்ட நடைமுறை எதார்த்தங்களையும் மிகச் சரியாகச் சமநிலைப்படுத்துவதே தற்போதைய அரசாங்கங்களின் பிரதான சவாலாகும்.
இலங்கையில் அடிமட்ட அரசியல் இயக்கங்கள் மற்றும் பிராந்திய தலைமைத்துவப் பணிகளில் பெண்களின் பங்களிப்பு கணிசமாக அதிகரித்து வருகின்றது. எனினும், ஆழமாக வேரூன்றிய சமூக, அரசியல் கட்டமைப்புகளை மாற்றி அவர்களுக்குப் போதிய அரசியல் வாய்ப்புகளை உருவாக்குவதில் இன்னும் சவால்கள் நீடிக்கவே செய்கின்றன.
குறிப்பாக, பெண்கள் குடும்பங்களிலும் சமூகத்திலும் செய்யும் ஊதியம் பெறும் மற்றும் பெறாத 'பராமரிப்புப் பணிகள்' பாரம்பரிய பொருளாதார அமைப்புகளில் பெரும்பாலும் அங்கீகரிக்கப்படாமல் புறக்கணிக்கப்படுகின்றன.
உண்மையான நிலைபேறான அபிவிருத்தி என்பது வெறும் பொருளாதார முன்னேற்றத்தை மட்டும் குறிக்காது. அது மனித கௌரவம், சமூக நீதி மற்றும் மக்களின் நல்வாழ்வையும் பாதுகாப்பதாக அமைய வேண்டும் என்றார்.
மக்களின் போராட்டங்கள்
சமூக மானுடவியலாளர், கல்வியாளர் மற்றும் அரசியல் தலைவர் எனத் தனது பன்முக அனுபவங்களை ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் முன்னிலையில் பகிர்ந்துகொண்ட பிரதமர், மக்கள் போராட்டங்களை எவ்வாறு நீண்டகாலக் கொள்கை ரீதியான சீர்திருத்தங்களாகவும் நிறுவன மாற்றங்களாகவும் மாற்றியமைக்க வேண்டும் என்பதிலுள்ள சவால்களை விளக்கினார்.

அபிவிருத்தி முன்னுரிமைகள் என்பவை உள்ளூர் எதார்த்தங்களுக்கு இணங்க அமைவதையும், அது மக்களுக்குப் பொறுப்புக்கூறும் வகையில் இருப்பதையும் சர்வதேச நிறுவனங்களும் அரசுகளும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பிரதமரின் இந்த விரிவுரையைத் தொடர்ந்து நல்லாட்சி, நிறுவனங்களின் சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் பொருளாதார மீட்சி குறித்துப் பார்வையாளர்களுடன் விரிவான கலந்துரையாடல் அமர்வு ஒன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதமரின் உரையைப் பாராட்டிப் பேசிய ஒக்ஸ்போர்ட் உலகளாவிய மற்றும் பிராந்திய கற்கைகள் பிரிவின் தலைவர் பேராசிரியர் டீகோ சான்செஸ் - அன்கோச்சியா, புலமைசார் நுண்ணறிவையும் நடைமுறை அரசியல் அனுபவங்களையும் ஒருசேர உள்ளடக்கிய, தற்கால உலகுக்கு மிக அவசியமானதொரு காலோசித உரை இது என்று பாராட்டினார்.

டொலருக்கு நிகரான ரூபாயின் வீழ்ச்சியினால் ஏற்பட்டுள்ள தாக்கம்! வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்