உங்களுக்கு வீடு நாட்டிற்கு எதிர்காலம் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட வீடு திறந்து வைப்பு
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஓலைத்தொடுவாய் கிராமத்தில் மன்னார் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட வீடு ஒன்றை இன்று காலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி மேல், வைபவ ரீதியாகத் திறந்து வைத்துள்ளார்.
'உங்களுக்கு வீடு நாட்டிற்கு எதிர்காலம்' திட்டத்தின் கீழ் கடந்த ஜனவரி மாதம் குறித்த வீட்டை அமைக்க அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
மன்னார் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் 6 இலட்சம் ரூபாய் நிதி உதவியுடன், வீட்டு உரிமையாளரின் பங்களிப்புடனும் சிறந்த முறையில் அமைக்கப்பட்ட குறித்த வீடு இன்று காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் முகாமையாளர் எஸ்.யூட், மன்னார் மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் எம்.நோயல் ஜெயச்சந்திரன், மன்னார் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எல்.ஜே.றொகன் குரூஸ் மற்றும் கிராம அலுவலர் ஆகியோர் இணைந்து வைபவ ரீதியாகக் குறித்த வீட்டைத் திறந்து வைத்து உரிமையாளர்களிடம் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.