நாட்டின் பல பகுதிகளில் சிறப்பாக இடம்பெற்ற ஹஜ் பெருநாள் தொழுகை
இஸ்லாமியர்களால் ஹஜ் பெருநாள் நிகழ்வுகள் இன்று வவுனியாவில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்போது வவுனியா - பட்டாணிசூர் முகைதீன் ஜூம்மா பெரிய பள்ளிவாசலில் மௌலவி ஏம்.அமீனுதீன் தலைமையில் தொழுகை இடம்பெற்றுள்ளது.
கோவிட் தொற்று பரவலை கருத்தில் கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு சுகாதார விதிமுறைகளை பேணியவாறு வழிபாடுகளில் ஈடுபட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
வவுனியா செய்தி - தீசன்
மன்னார்
மன்னார் மூர்வீதி ஜும்மா பள்ளிவாசலில் இன்றைய தினம் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகள் இடம் பெற்றது.காலை 6.45 மணிக்குப் பெண்களுக்கும் காலை 7.30 மணியளவில் ஆண்களுக்கும் பெருநாள் தொழுகை இடம் பெற்றது.
இவ் தொழுகை மூர்வீதி ஜும்மா பள்ளிவாசலின் மௌலவி எம்.அஸீம் தலைமையில் நடைபெற்றது.இதன் போது ஹஜ்ஜுப் பெருநாளின் முக்கியத்துவம், அல்குர்ஆன் சமய நற்சிந்தனைகள், பற்றியும் இங்கு எடுத்துக் கூறப்பட்டது.
மேலும் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்கள் பாதுகாக்கப்படவும் விசேடமாகத் துவா தொழுகைகள் இடம் பெற்றது.
இதன் போது கலந்து கொண்டவர்கள் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக சமூக இடைவெளிகளை பின் பற்றிக் கலந்து கொண்டனர்.
மன்னார் செய்தி - ஆசிக்
திருகோணமலை
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாயில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகள் சுகாதார முறைப்படி நடைபெற்றது.
கந்தளாய் இலாஹிய்யா ஜும்ஆ பள்ளிவாயலில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகள் இன்று(21) சிறப்பாக நடைபெற்றதோடு ஆண்களும் பெண்களும் புத்தாடைகளை அணிந்து சுகாதார நடைமுறைகள் மற்றும் சம இடைவெளிகளைப் பேணி தொழுகையில் ஈடுபட்டார்கள்.
பெருநாள் தொழுகைகளை முகம்மட் ஸவாஹிர் மௌலவி நடாத்தியதோடு நாட்டின் கோவிட் வைரசின் தாக்கம் தொடர்பாகவும் தெளிவுபடுத்தப்பட்டது.
திருகோணமலை செய்தி - முபாரக்