நொச்சிக்குளம் பகுதியில் துப்பாக்கிச்சூடு : மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்
மன்னார் - மதவாச்சி பிரதான வீதி பகுதியில் நொச்சிக்குளம் பகுதியை சேர்ந்த ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் கிராம மக்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த வீதி மறியல் போராட்டமானது, இன்று (19.02.2024) காலை 8.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நொச்சி குளத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் வயலில் நீர் பாய்ச்சிக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ரி-56 ரக துப்பாக்கி மூலம் விவசாயி மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது குறித்த விவசாயி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொடரும் தாக்குதல்
மேலும், கடந்த சில நாட்களாக குறித்த கிராமத்தில் உள்ள மக்கள் மீது குழுவினர் தாக்குதல் நடத்தி வருவதாகவும், இதுவரை மூவர் உயிரிழந்துள்ளதாகவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பொலிஸாரால் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள போதும், அதனை மீறி குறித்த சம்பவம் தொடர்வதாகவும், இந்த சம்பவத்தை கண்டித்து நொச்சிக்குளம் கிராம மக்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கொலைகாரர்களுக்கு ஆயுதம் கொடுத்தது யார்?,எங்களை பாதுகாப்பது அரசின் கடமை, எங்கள் உயிருக்கு பாதுகாப்பு தாருங்கள்,எங்கள் மக்களுக்கு நீதி யார் தருவது? " போன்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்த பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மக்களின் கோரிக்கை
மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை உடன் சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பாக மன்னார் மற்றும் உயிலங்குளம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து இன்று காலை முதல் மன்னார் பிரதான பாலம் ஊடாக மன்னார் நகருக்கு வருகை தரும் அனைத்து வாகனங்களும் பொலிஸாரினால் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



