பொய் பிரசாரத்தில் ஈடுபடும் தற்போதைய அரசாங்கம்.. நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டு
அரசாங்கம் பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலை உருவாகியுள்ளது எனவும் தனது பிழைகளை மூடி மறைப்பதற்காக பொய்யான தகவல்களை பிரசாரம் செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது குடும்ப உறுப்பினர்கள் கைது செய்யப்படுவதனை தடுக்க மாநாயக்க தேரர்களின் ஒத்துழைப்பை நாடுவதாக சில போலி பிரசாரங்கள் செய்யப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முகநூல் பதிவு
எனினும் இந்த பிரசாரங்களில் எவ்வித உண்மையும் கிடையாது என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்த பிரசாரமானது பௌத்த மாநாயக்க தேரர்களுக்கு செய்யும் அபகீர்த்தியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னர் நீதிபதிகள் தொடர்பிலும் இவ்வாறு அரசாங்கம் பொய்யான தகவல்களை சமூகமயப்படுத்தியது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தமது குடும்ப உறுப்பினர்கள் விசாரணைகளுக்கு அஞ்சியது கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். விசாரணைகளின் போது விசேட சலுகையோ அல்லது அனுசரணையோ எதிர்பார்க்கவில்லை எனவும் நீதிமன்றின் மீது பூரண நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, முன்னாள் ஜனாதிபதியின் துணைவியார் சிராந்தி ராஜபக்சவை கைது செய்ய ஆயத்தமாகி வருவதாகவும் இதனை தடுக்க மகிந்த மல்வத்து பீடாதிபதியின் உதவி கோரியதாகவும் பிரபல எழுத்தாளர் சனத் பாலசூரிய அண்மையில் முகநூலில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
