பௌத்தமயமாக்கல் நடைபெறாது..! அநுர அரசாங்கம் வாக்குறுதியை மீறியதாக கோவிந்தன் கருணாகரம் குற்றச்சாட்டு
வடகிழக்கு மாகாணம் பகுதியில் தற்போது தமிழ் தேசியக் கட்சிகளுக்கு 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். ஆனால் தேசிய மக்கள் சக்திக்கு 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை உணர்ந்து கொண்டு தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட செட்டிபாளையத்தில் இன்று(17.04.2026) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் மாறி மாறி இந்த நாட்டை ஆட்சி செய்த அரசாங்கங்களைப் போலவே, தற்போதைய அரசாங்கமும் நடந்து கொள்கிறது.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரும் முன் பல வாக்குறுதிகளை வழங்கியது. குறிப்பாக, வடக்கு - கிழக்கு மக்களின் வாக்குகளைப் பெற்று, அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம் என அவர்கள் தெரிவித்தனர்.
35 வருடங்களுக்கு மேல் போராடும் கைதிகள்
சிறையில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக வாடும் அரசியல் கைதிகளை விடுவிப்போம் என்றும், இலங்கை பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிப்போம் என்றும் கூறப்பட்டது.
அதேபோல், மத அடிப்படையில் வடக்கு - கிழக்கில் விகாரைகள் அமைக்கப்படாது, பௌத்தமயமாக்கல் நடைபெறாது என்றும் வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. ஆனால், இதுவரை அவற்றில் பெரும்பாலானவை நிறைவேற்றப்படவில்லை. வழங்கப்பட்ட வாக்குறுதிகள் காற்றில் பறந்துவிட்டதாகவே கருதுகிறோம்.

முந்தைய அரசுகளைப் போலவே தற்போதைய அரசும் அதே போக்கில் செயல்படுகிறது என்பதே பொதுவான கருத்தாக உள்ளது. மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.
அதேவேளை, தமிழ் தேசியக் கட்சிகள் இன்றும் ஒருமித்த நிலைப்பாட்டில் இல்லாமல் பிரிந்து செயற்படுவது, தமிழ் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் சிலர் கருதுகின்றனர்.
2009 ஆம் ஆண்டுக்கு முன்பு வடக்கு - கிழக்கில் ஆயுதப் போராட்டம் நடைபெற்ற காலத்தில் தமிழ் மக்களிடையே ஒருமைப்பாடு காணப்பட்டது. அது அந்த சூழ்நிலையில் அவசியமானதாகவும் இருந்தது. ஆனால் 2009 க்கு பின்னர், தமிழ் தேசியக் கட்சிகள் தாங்களே தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எனக் கூறி பல பிரிவுகளாகப் பிரிந்துவிட்டனர். இது ஏற்றுக்கொள்ளக் கூடிய நிலை அல்ல என குறிப்பிட்டுள்ளார்.
மயில் விஷயத்தில் பாண்டியன் எடுத்த முடிவு, சிக்கிய கதிர்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan