கோவிட் கொடுப்பனவு வழங்கும் செயற்பாடு தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள விசனம்
நாடு முழுவதும் உள்ள சமுர்த்தி பயனாளிகளுக்கும் மற்றும் சமுர்த்தி முத்திரை இல்லாத வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களுக்கும் குறித்த ஒரு திகதியில் கோவிட் கொடுப்பனவு வழங்க இருப்பதாக அரசாங்கம் ஊடகங்கள் மூலம் அறிவித்தல் வழங்குகிறது.
இந்த நிலையில் அரசாங்கம் கொடுப்பனவு வழங்குவதாக அறிவித்த திகதியில், மக்கள் கிராம சேவகர் அலுவலகங்களிலும் சமுர்த்தி அலுவலகங்களிலும் ஒன்று கூடுகின்றனர்.
ஆனால் அரசாங்கம், தாங்கள் அறிவித்த திகதிகளில் கொடுப்பனவினை வழங்குவதற்கு ஏற்ற விதத்தில், உத்தியோகத்தர்களிடம் கொடுப்பனவுக்கான பணத் தொகைகளை வழங்குவதில்லை.
அரசாங்கம் அறிவித்த திகதிக்குப் பிந்தியே உத்தியோகத்தர்களின் கைகளுக்குக் கொடுப்பனவுக்கான பணத்தொகை கிடைக்கிறது.
இதனால் அரசாங்கம் அறிவித்த திகதியில் கொடுப்பனவுகளைப் பெறுவதற்காக சமுர்த்தி மற்றும் கிராம சேவகர் அலுவலகங்களுக்குச் செல்லும் மக்கள் காத்திருந்து ஏமாற்றத்துடன் வீடு செல்லும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன.
அத்துடன் அரசாங்கம் வழங்கும் கொடுப்பனவு தொகை உத்தியோகத்தர்களது கைகளுக்கு வந்தும் அதனைத் தருவதற்கு உத்தியோகத்தர்கள் பின்னடிப்பதாகவும் ஏமாற்றுவதாகவும் நினைத்து, மக்கள் உத்தியோகத்தர்களுடன் முரண்படுகின்றனர்.
இதனால் உத்தியோகத்தர்களும் மக்களும் மிகுந்த அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர்
என சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.