நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்க அரசாங்கம் தயார் - கெஹெலிய ரம்புக்வெல்ல
துறைமுக நகர விசேட பொருளாதார ஆணைக்குழுவை நியமிப்பது சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள சட்டமூலம் தொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை ஏற்க அரசாங்கம் தயாராக இருப்பதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
குறித்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மை பலத்தில் நிறைவேற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதனடிப்படையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்ற வேண்டிய ஷரத்துக்களை திருத்தி மீண்டும் சட்டமூலம் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துறைமுக நகர விசேட பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 10 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
அவற்றை ஆராய்ந்த நீதிமன்றம் தனது தீர்ப்பை சபாநாயகருக்கு அனுப்பி வைத்திருந்தது. நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் இன்று நாடாளுமன்றத்திற்கு அறிவித்தார்.
தீர்ப்பின் அடிப்படையில் சில ஷரத்துக்கள் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்திலும் சர்வஜன வாக்கெடுப்பிலும் நிறைவேற்றப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.