சுமந்திரனுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ள பிரதி அமைச்சர்!
"இனவாத அரசியல் பாதையை சுமந்திரன் மாற்றாவிட்டால் வடக்கு, கிழக்கில் அவரது அரசியல் எதிர்காலம் இல்லாமல்போகக்கூடும்."என பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில், "சுமந்திரன் அடிப்படைவாதி அல்லர், அவர் நடுநிலைவாதி என்றே நாம் இதுவரை காலமும் நினைத்துக்கொண்டிருந்தோம்.
இனவாதம் என்ற மிருகம்
ஆனால், நடுநிலை என்ற போர்வையின் பின்னால் மறைந்திருந்த இனவாதம் என்ற மிருகம் தற்போது வெளிக்கிளம்பியுள்ளது. இனவாதம் இல்லாவிட்டால் அவர்களுக்கு அரசியல் இருப்பு இல்லை. எனினும், இனவாதத்துக்கு ஒருபோதும் இருப்பு இருக்காது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
சுமந்திரன் தெரிவு செய்த பாதை தவறு. எனவே, அவர் தனது பயணத்தை மாற்றிக்கொண்டு இனவாதமற்ற நாட்டின் சமத்துவத்துக்காக முன்னிலையானால் நல்லது.
அவ்வாறு இல்லையேல் அரசியல் எதிர்காலம் இல்லாமல் போகும். கடந்த பொதுத்தேர்தலில் அவர் நாடாளுமன்றம்கூட வரவில்லை. அவருக்கு வடக்கு, கிழக்கில் அரசியல் வாய்ப்பு கிட்டாமல் போகும்.”என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேபோன்ற காட்டமான உரை ஒன்றைச் சுமந்திரனின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல், ஆனால் அவரைச் சுட்டும் விதத்தில் , அவரை இனவாதி என மோசமாக விமர்சிக்கும் விதத்தில், அரசு தரப்பில் சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்கா நேற்றுமுன்தினம் நாடாளுமன்றத்தில் உரை ஆற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




