சஜித் பிரேமதாசவுக்கு எதிரான அரசியல் நடவடிக்கைளை தீவிரப்படுத்த அரசாங்கம் தீர்மானம்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு எதிரான அரசியல் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன் ஒரு கட்டமாக அவருக்கு எதிரான முறைப்பாடுகள் மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளை மீண்டும் முன்னெடுக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
அதன் மூலம் 'நீங்கள் அரசாங்கத்துக்கு எதிராக தீவிரமாக செயற்பட முயற்சித்தால் இதுதான் உங்களுக்கு நடக்கும்...' என்று சஜித்துக்கு ஒரு சமிக்ஞையை விடுக்க அரசாங்கம் நாட்டம் கொண்டுள்ளது.
குற்றச்சாட்டு
2015-2019 நல்லாட்சிக் காலத்தில் நடைபெற்ற சம்பவங்களின் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தொடர்பாக 3 விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.

அவற்றில் ஒன்று, சஜித்தின் பாரியார் ஜலனி பிரேமதாசவுக்குச் சொந்தமான அழகுநிலையத்தில் பணியாற்ற வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்கள் பயன்படுத்தப்பட்டனர் என்ற குற்றச்சாட்டு முக்கியமானது.
இது தொடர்பாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட ஊழியர்களின் அனைத்து வாக்குமூலங்களும் பெறப்பட்டிருந்தாலும், ஜனாதிபதியால் கொடுக்கப்பட்ட 'சிவப்பு சமிக்ஞை' காரணமாக விசாரணை அப்படியே இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தது.
விசாரணை
தற்போது குறித்த விசாரணைகளை மீண்டும் முன்னெடுக்க அரசாங்கத் தரப்பு உத்தேசித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்கு எதிராக கடந்த 23ம் திகதி எதிர்க்கட்சியின் சகல தலைவர்களையும் தனது அலுவலகத்தில் ஒன்றுகூட்டிய எதிர்க்கட்சித் தலைவரின் செயற்பாடு அரசாங்கத்துக்கு ஆழ்ந்த மன உளைச்சலைக் கொடுத்துள்ளது.
அதன் காரணமாகவே சஜித் பிரேமதாசவுக்கு எதிரான விசாரணைகளை தூசுதட்ட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.