கொரோனா மரண விடயத்தில் அரசாங்கம் தனித்தே ஒரு இனம் சார்ந்து முடிவெடுத்தல் கூடாது! க.இன்பராசா தெரிவிப்பு
கொரோனா மரண விடயம் தொடர்பில் அரசாங்கம் ஒரு முடிவை எடுப்பதாக இருந்தால் தனித்தே ஒரு இனத்தைச் சார்ந்து எடுக்காமல் இந்த நாட்டில் வாழும் ஏனைய இன மக்களின் கருத்துக்களையும் கருத்திற் கொண்டே எடுக்க வேண்டும் என புனர் வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா தெரிவித்துள்ளார்.
கொரோனாவினால் மரணித்தவர்களின் உடலங்களை எரிப்பதா புதைப்பதா என்பது தொடர்பில் நாட்டில் தொடர்ந்து கொண்டிருக்கும் சர்ச்சை தொடர்பில் இன்றைய தினம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தற்போது எமது நாட்டில் மட்டுமல்ல உலகம் பூராகவும் கொரோனா தொற்றுநோய் பரவி உலக மக்கள் அனைவரையும் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றது.
இதன் மூலம் பல இலட்சக்கணக்கான உயிர்களும் காவுகொள்ளப்பட்டுள்ளன.
அந்த வகையிலே தற்போது இலங்கையில் இவ்விடயம் ஒரு அரசியல் ரீதியாகவும், இன ரீதியாகவும் பார்க்கப்பட்டு வருவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
கொரோனா நோயால் மரணமடைந்தவர்களின் உடலங்களை எரிப்பது இந்த நாட்டில் பெரும் சர்ச்சையை தற்போது ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றம் மற்றும் அதற்கு வெளியிலும் இஸ்லாமிய அரசியற் பிரமுகர்களும், மதத்தலைவர்களும் கொரோனா நோயால் இறப்பவர்கள் தகனம் செய்யாமல் அடக்கம் செய்வதற்கு வழங்குமாறு பல கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
அந்த அடிப்படையில் எமது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இது தொடர்பில் தங்களின் சார்பு நிலைக் கருத்துகளை முன்வைத்துக் கொண்டிருக்கின்றனர்.
கருத்துக்களைத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்களை நாங்கள் பாராட்டுகின்றோம்.
ஆனால் இந்த விடயத்தில் எமது இனம் சார்ந்து நேரடியாக தங்கள் கருத்துகளை எவரும் முன்வைக்கவில்லையே என்பதே மனவேதனை தரும் விடயமாக இருக்கின்றது.
கொரோனா நோயினால் இறப்பவர்கள் தொடர்பில் அரசாங்கம் எடுக்கும் முடிவிற்குக் கட்டுப்பட வேண்டிய கடமை, கோட்பாடு இந்த நாட்டின் பிரஜைகள் ஒவ்வொருவருக்கும் உண்டு.
இதனை அரசாங்கம் ஒரு மதம், ஒரு இனம் சார்ந்து மேற்கொள்ளவில்லை.
இந்த நாட்டின் அனைத்துப் பிரஜைகளுக்கும் இதே முடிவே நடைமுறைப் படுத்தப்படுகின்றது.
இவ்வாறான நிலைமையில் தற்போது அரசாங்கம் எடுத்திருக்கும் முடிவுகளை இந்த நாட்டில் வாழுகின்ற மூவின மக்களும் ஏற்றுக் கொண்டே வருகின்றனர்.
இவ்வாறு இருக்கையில் ஒரு மதம் சார்ந்து சிந்தித்து இஸ்லாமியச் சகோதரர்கள் தங்கள் உடல்களை அடக்கம் செய்யத் தரும்படி விடயங்களை முன்வைத்து வருகின்றனர்.
இதற்கு தற்போது அரசாங்கம் இணக்கம் தெரிவித்தது போன்றும், நீர் மட்டம் ஆழமாக உள்ள பகுதிகளை இதற்காகத் தெரிவு செய்து தருமாறு கோரப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.
அந்த அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் இறக்காமம், மற்றும் வடக்கு மாகாணத்தில் மன்னார் மரிச்சுக்கட்டி என்ற பிரதேசங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.
இது தொடர்பில் புனர் வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் வேண்டுகோள் என்னவென்றால் இந்த நாட்டில் நீதி, நியாயம் சரிசமமாக இருக்க வேண்டும்.
இதில் ஒரு சாராருக்குச் சார்பானதாக இருக்கக்கூடாது. இதனை இன மத ரீதியில் அணுகவேண்டாம்.
இன்றைய நிலையில் நூற்றுக்குத் தொண்ணூறு வீதமான இந்து மக்களும் தங்கள் உடலங்களை அடக்கம் செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
அதே போன்று கிறிஸ்தவ மக்களும் அவர்களின் உடலங்களை அடக்கம் செய்தே வருகின்றனர்.
அவ்வாறே பெரும்பான்மை பௌத்த மக்களும் முற்று முழுதாக தகன செயற்பாடுகளை மேற்கொள்வதில்லை.
அந்த அடிப்படையில் இந்த அரசாங்கம் ஒரு முடிவை எடுப்பதாக இருந்தால் தனித்தே ஒரு இனத்தைச் சார்ந்து எடுக்காமல் இந்த நாட்டில் வாழும் ஏனை இன மக்களின் கருத்துக்களையும் கருத்திற் கொண்டே தீர்மானம் எடுக்க வேண்டும் என இந்த நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு வேண்டுகோள் விடுக்கின்றோம்.
அவ்வாறு இல்லாமல் அரசாங்கம் ஒரு இனம் சார்ந்து முடிவுகளை மேற்கொள்ளுமாக இருந்தால் கொரோனா நோயால் இறக்கும் அனைவரின் உடலங்களையும் அந்த அந்த மாவட்டத்தில் அவர்களின் உறவினர்கள் பொருத்தமான இடங்களைத் தெரிவு செய்து தருவதற்குத் தயாராக இருக்கின்றார்கள்.
எனவே அனைத்து உடலங்களையும் அவ்வாறான இடங்களில் அந்த அந்த மக்களின் முறைகளுக்கு ஏற்ப அடக்கம் செய்யலாம்.
இந்த கொரோனா விடயத்தில் ஒரு இனம் சார்ந்து அரசாங்கம் முடிவெடுக்குமாக இருந்தால் பௌத்தம், கிறிஸ்தவம், இந்து என மும்முனைகளில் அரசாங்கம் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.
இதனை நாங்கள் குரோத மனப்பான்மையுடனோ, வெறுப்புடனோ தெரிவிக்கவில்லை இந்த நாட்டின் அனைத்து மக்களையும் இன மத பேதமின்றி ஒரே சமமான நிலையில் பார்க்க வேண்டும்.
அனைத்து மக்களுக்குமான நீதி ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவே தெரிவிக்கின்றோம்.
அந்த அடிப்படையிலே இது தொடர்பில் சரியான ஒரு முடிவினை இந்த நாட்டின் தலைவர்கள் எடுப்பார்கள் என்பதில் எமக்கு நம்பிக்கை உண்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.