கோட்டாபயவிற்கு ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்பில்லை: சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா
உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புச் சம்பவத்துடன் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு தொடர்பு இருப்பதாக இதுவரையில் எந்தவொரு சாட்சியமும் வெளிவரவில்லை என்று ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
சட்டத்திற்கு முரணான வகையில் அவர் கைது செய்யப்பட்டால், அவரது சுதந்திரம் பறிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
'சனல் 4' (Channel 4) தொலைக்காட்சியில் வெளியான தகவல்களின் அடிப்படையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்து தடுப்புக் காவலில் வைப்பதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரொஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திஸாநாயக்க ஆகியோரடங்கிய நீதியரசர்கள் ஆயத்தின் முன்னிலையில் இந்த மனு பரிசீலிக்கப்பட்டது.
இந்த மனுவின் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்டோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
'சனல் 4' ஊடகத்தின் வெளிப்படுத்தல்களை அடிப்படையாகக் கொண்டு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக எந்த நேரத்திலும் தனது கட்சிக்காரர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படக்கூடிய அபாயம் உள்ளதாக சட்டத்தரணி குறிப்பிட்டார்.
கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக ஏற்கனவே கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றினால் வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள ஷானி அபேசேகர, கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் பொய் சாட்சியங்களை உருவாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் என்பதால், அவரிடமிருந்து நியாயமான அல்லது பாரபட்சமற்ற விசாரணையை எதிர்பார்க்க முடியாது என ஜனாதிபதி சட்டத்தரணி வாதாடினார்.
போதிய சாட்சியங்களின்றி ஒருவரைக் கைது செய்வது அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள இயற்கை நீதியின் கோட்பாடுகளை மீறுவதாகும் என சுட்டிக்காட்டிய அவர், இது 'ராடா' (RADA) வழக்குத் தீர்ப்பிலும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்றார். அத்துடன், சட்டமா அதிபர் திணைக்களம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கைப்பாாவை போலச் செயற்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், ஜனாதிபதி சட்டத்தரணி சுவர்ஷி ஹேரத் கருத்துத் தெரிவிக்கையில், மனுதாரர் தரப்பு சட்டத்தரணியின் வாதங்கள் ஊடகங்களை இலக்கு வைத்து முன்வைக்கப்படுவது போல் தோன்றுவதாகக் குறிப்பிட்டார்.
மனு மீதான மேலதிக விசாரணை எதிர்வரும் ஜூன் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மனுதாரரான முன்னாள் ஜனாதிபதி சார்பில் சட்டத்தரணி சனத் விஜேவர்தனவின் அறிவுறுத்தலின் பேரில், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியும் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.