கொழும்பு நகருக்கான தங்க நுழைவாயில்!!
இலங்கை முதல் முறையாக அதி சக்தி வாய்ந்த தொழிற்நுட்பத்துடன் கூடிய கம்பி இணைப்பின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட புதிய களனி பாலத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச (mahinda Rajapaksa) ஆகியோர் நாளை மாலை திறந்து வைக்க உள்ளனர்.
இந்த புதிய களனி பாலத்திற்கு “கல்யாணி தங்க நுழைவு” (Kalyani Gold Gate) என பெயரிடப்பட்டுள்ளது. சுகாதார வழிக்காட்டல்களுக்கு அமைய இந்த வைபவம் நடைபெறும் என பெருந் தெருக்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை திறக்கப்பட்ட பின்னர், கொழும்பு பிரதான நகரத்தையும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கான வீதியும் இணைக்கப்பட்டால், கொழும்புக்குள் வரும் வாகனங்களில் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது.
வாகனங்கள் அதிகரித்துள்ள நிலையில், தற்போதைய களனி பாலம் அதற்கு ஈடுகொடுக்க முடியாது என்பதால், 2014 ஆம் ஆண்டு புதிய களனி பாலத்தை நிர்மாணிக்கும் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பெருந் தெருக்கள் அமைச்சர் என்ற வகையில் அன்று உடன்படிக்கையில் கையெழுத்திட்டிருந்தார்.
கொழும்பு - கட்டுநாயக்க நெடுஞ்சாலையின் கொழும்பு நிறைவிடத்தில் இருந்து பண்டாரநாயக்க சுற்று வட்டம் வரை 6 வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தில் அங்கிருந்து ஒருகொடவத்தை வரையும், இஞ்சிக்கடை சந்தி வரையும், துறைமுக நுழை வாயில் வரையும் 4 வழித்தடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
களனி ஆற்றின் மேலாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த பாலம் 380 மீற்றர் நீளம் கொண்டது. ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்புக்கான அமைப்பின் நிதி பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த பாலத்தை நிர்மாணிக்க 41 ஆயிரத்து 435 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.