அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட குழுவினர்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட குழுவினர் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று அரசியல் கைதிகளை பார்வையிட்டுள்ளனர்.
அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் சட்ட ஆலோசகர் காண்டீபன் ஆகியோரை அதிகாரிகள் முதலில் சிறைச்சாலைக்குள் அனுமதிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.
சிறைச்சாலைகள் அமைச்சின் செயலாளர் நாயகத்தின் முன் அனுமதி பெறப்பட வேண்டும் என்று கூறியே உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
எனினும் பின்னர் அமைச்சின் செயலாளருடன் தொலைபேசியில் தொடர்பை மேற்கொண்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அரசியல் கைதிகளை தாங்கள் கட்டாயம் பார்வையிட்டு நிலைமைகளை கேட்டறிய வேண்டும் என கடுமையாக வலியுறுத்தியதை அடுத்து அமைச்சின் செயலாளர் நாயகத்தின் அறிவுறுத்தலின் பிரகாரம் கஜேந்திரகுமார் உள்ளிட்ட குழுவினர் சிறைச்சாலைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இதன்போது அரசியல் கைதிகளை சந்தித்த குழுவினர் நிலைமைகளை கேட்டறிந்ததுடன் உரிய தரப்புகளுக்கு இவ் விடயம் பற்றி அறிவித்து கைதிகளின் பாதுகாப்பு தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அழுத்தம் கொடுப்பதாக உறுதியளித்தனர்.