"வீட்டுக்குப் போ கோட்டா" என்கின்றனர் மக்கள் - கோட்டா அரசுக்கு மௌன ஆதரவு அளிக்கிறது மகாசங்கம்
"இன்றைய சக்கரவர்த்தி நாளைய கைதி" என்ற பைபிளின் பழைய ஏற்பாட்டு வாக்கியம் இங்கு கவனத்துக்குரியது. யுத்தக் கதாநாயகர்கள், வெற்றி வீரர்கள் என்று சிங்கள பௌத்தர்கள் மத்தியில் புகழப்பட்டு போர்வெற்றி ஆட்சியாளர்களாய் ஆட்சிக்கு வந்தவர்களை இப்போது paid killers, என்றும், இன்று சவப்பெட்டியில் வைத்து ஒப்பாரி சொல்லித் தகனம் செய்யும் காட்சி கொழும்பு மாநகரிலும், அவர்களின் சொந்த ஊரிலும் அரங்கேறிக் கொண்டிருக்கிறன.
இத்தகைய அரசியல் மாற்றத்தின் பின்னணியில் இன்றைய இலங்கையின் அரசியலை மதிப்பீடு செய்ய இக்கட்டுரை முயல்கிறது.
ஒரு கிளர்ச்சி அல்லது ஒரு கலகத்தின் போது அதில் ஏற்படக்கூடிய வெற்றிதோல்வி என்பது அதில் காணப்படும் ஏதுநிலைகளில் தங்கியுள்ளது.
கிளர்ச்சி என்பது ஏதுநிலைகளினால் உருவாகும். அது சார்ந்த ஏது நிலைகள்தான் எதனையும் நிர்ணயிக்கும். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அரசாங்கத்திற்கு எதிரான கிளர்ச்சி கொதிநிலை அடைந்திருக்கின்றது.
இதனால் காலிமுகத்திடலில் திடீரென ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள் "Gotta Go Home"என்ற கோசத்துடன் கடந்த 8 திகதிமுதல் தொடர் போராட்டங்களை கடந்த இரு வாரங்களாக மேற்கொள்கின்றனர். இதன் ஒரு பகுதியாக (19.04.22) றம்புக்கணயில் நடந்த போராட்டத்தின்போது பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் மரணமடைய 24 பேர் காயமடைந்திருந்தனர். இதனால் நாடு முழுவதும் போராட்டங்கள் மேலும் தீவிரம் அடைய தொடங்கியது . அதைத் தொடர்ந்து ஆட்சியாளர் ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியும் உள்ளார்.
இந்த அரசாங்கத்திற்கு எதிரான உணர்ச்சியலையைப் பயன்படுத்தி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவோ, அல்லது அரசைக் கவிழ்க்கவோ முடியாத நிலையில் எதிர்கட்சிகள் உள்ளன. அரசுக்கு எதிரான கொதிநிலை தீவிரமடைந்த நிலைமையை சாதுரியமாக பயன்படுத்திக்கொள்ள அவர்கள் எவ்வளவு தூரம் ஒருங்கிணைந்துள்ளனர் என்பது கேள்வியே.
இவர்கள் வெறுமனே ஜனாதிபதி கோட்டாபயவை பதவி விலகுமாறு கேட்கின்றனர். ஆனால் அவ்வாறு ஜனாதிபதி பதவி விலகினால், அதன் பின்னர் நாட்டில் ஏற்பட்டிருக்கும் நிலைமையை சமாளிப்பதற்கு தெளிவான வரையறையோ, திட்டமோ இல்லதாதவர்களாகவே எதிர்க்கட்சிகள் உள்ளன. உதாரணமாக ஜனாதிபதிக்கு எதிரான குற்றபிரேரணையில் கையேழுத்திடுவதற்கு சஜித் பிரேமதாசவிற்கு பல நாட்கள் செல்லுமளவிற்கு இருக்கிறது இவர்களின் வேகம்.
இந்த குழப்பநிலைக்கு தெளிவான தீர்மானம் எடுக்கும் தலைமைத்துவமின்மையே முக்கிய காரணமாகும். மக்கள் "Gotta Go Home” என்ற ராஜபக்ச குடும்பத்தினரை வீட்டுக்கு அனுப்பும் போராட்டங்களில் ஈடுபட்டாலும், கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் கோட்டா அரசாங்கம் தம்மை சுதாகரித்துக்கொண்டு தம்மைப் பலப்படுத்தியிருப்பதனால், கோட்டாவை வீட்டுக்கு அனுப்புவது கடினமாகவே உள்ளது.
ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பதற்கு 20 வது திருத்தச் சட்டத்தை நீக்கி 19 வது திருத்தச் சட்டத்தை அப்படியே கொண்டுவர முடியாதாகையால் 21 வது சீர்திருத்த சட்டத்தை கொண்டுவருவதற்கு குரல்கொடுக்கின்றனர். நாட்டில் நடைபெறும் குழப்பங்களை பயன்படுத்தி அரசாங்கத்துடன் சில விட்டுக்கொடுப்புக்களைச் செய்து 20 திருத்த சட்டத்தை மாற்றி ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பதற்கான வழிகளை செய்வதே தற்போதைய சூழ்நிலையில் எதிர்க்கட்சிகளுக்கு இருக்கும் தெரிவாகும்.
மாறாக கோட்டா அரசாங்கத்தை கவிழ்க்கப்போகின்ற முயற்சியானது கோட்டா அரசினை மேலும் பலப்படுத்தும். போர் வெற்றியின் மமதையில் ஆட்சிக்கு வந்த ராஜபக்ச குடும்பத்தினர் மீதுள்ள மக்களின் அதிருப்தி நியாயமானது. போரின் பின்னர் அவர்கள் மேற்கொண்ட ஊழல் குற்றச்சாட்டுக்கள், நாட்டின் பொருளாதாரத்தை வளர்க்கூடிய சந்தர்ப்பங்களை தவறவிட்டமை என பலவற்றைச் சொல்லலாம்.
இலங்கை வரலாற்றில் என்றும் இல்லாத கடும் பொருளாதார நெருக்கடி 22 மில்லியன் மக்களின் வயிற்றில் கை வைத்திருக்கிறது. இதனால் மக்கள் அதற்கு எதிராக கிளர்ந்தெழுந்து வீதிமறியல் போராட்டங்களை செய்யுமளவிற்கு இறங்கியிருக்கின்றனர். போரின் பின்னர் சிங்கள பௌத்த பேரினவாதத்தால் கட்டமைக்கப்பட்ட இந்த அரசாங்கத்தை ஒரு கட்டத்திற்கு மேல் ஆட்டம்காண செய்யமுடியாதிருக்கிறது.
இது இலங்கையின் ஜனநாயகத்திற்கு விழுந்திருக்கும் அடியே. இருந்தபோதும் ராஜபக்ச குடும்ப அரசாங்கத்தை இன்றுவரை காப்பாற்றி வைத்திருப்பது சிங்கள பௌத்த பேரினவாதத்தால் கட்டமைக்கப்பட்ட மகாசங்கமேயாகும். இச்சங்கம் ராஜபக்சக்களை தூக்கி எறிவதற்கோ அல்லது அவர்களை முற்றாக கைவிடுவதற்கோ தயாரில்லை எனலாம்.
சிங்கள பௌத்த பேரினவாத வெற்றியின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட வெற்றி இன்று மக்கள் மத்தியில் புஸ்பவானமாக்கப்பட்டாலும், மகாசங்கம் மத்தியில் ராஜபக்சர்கள் இன்றும் யுத்த வெற்றிப் புருசர்களாகவே உள்ளனர். இதனாலேயே பேரினவாதத்தின் காவலர்களான மகாசங்கம் வேறு தெரிவின்றி இவர்களை தற்போதும் மௌனமாக ஆதரிக்கின்றது. இதை ”silence support” என்று சொல்வார்கள். இந்த மௌன ஆதரவு ராஜபக்ச குடும்பத்தினருக்கு இருக்கும் வரை அவர்களை ஆட்சியிலிருந்து கலைக்க முடியாது.
அடிப்படையில் மகாசங்கம். தெளிவான இந்திய எதிர்ப்புவாதம் - தமிழின அழிப்புவாதம் என்ற திட்டவட்டமான கட்டமைப்பைக் கொண்ட சித்தாந்தத்தைக் கொண்டது. குறிப்பாக பௌத்த மகாசங்கத்தை நோக்கில் சியாம், இராமணிய, அமரபுர ஆகிய மூன்று நிகாயங்களைக் கொண்டது. இதில் சியாம் நிகாயமானது மொத்த பிக்குக்களில் 93% தத்தினரைக் கொண்டதாவும், சிங்கள உயர்சாதிக் கட்டமைப்பான கொய்கம சாதியை 100% கொண்ட கட்டமைப்புமாகும். இந்த சியாம் நிகாயத்தில் மல்வத்த, அஸ்கிரிய என்ற இரண்டு உயர் பீடங்கள் உள்ளன.
இவ்விரு பீடங்கள்தான் சிங்கள பௌத்த பேரினவாதத்தை வழிநடத்தும் கட்டமைப்பாகும். இவைதான் பௌத்த பேரினவாதத்தின் மத்தியிலும், அரசியலிலும் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டவை. ஏன் இலங்கையின் சட்டங்கள்கூட இவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. இதை கடந்த கால தமிழின அழிப்பில் கண்டிருக்கின்றோம்.
சட்டத்தைவிடவும் இவர்களின் ஆணை இலங்கையில் பலமானது என்பதற்கு ரணில் - பிரபா ஒப்பந்தம் ஒரு சிறந்த உதாரணம். அதாவது சட்டத்தின் படி இலங்கை அரசால் "பயங்கரவாதிகளுடன் தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் ஒரு அரசு , ஒரே மேசையில் சமமாக இருந்து பேசவோ, ஒப்பந்தங்களில் கைச்சாத்திடவோ முடியாது” என்ற நிலை இருந்தபோது ரணில் விக்கிரமசிங்க அஸ்கிரிய, மல்வத்த பீடங்களை நாடினார்.
இலங்கை ஒரு பௌத்த நாடு என்றவகையிலும், பௌத்த பீடங்களே அதன் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளதனாலும் இச்சட்டத்தடைகளை மீறி இப்பீடங்கள் ரணில் - பிரபா ஒப்பந்தத்திற்கு சம்மதித்து சமாதான முயற்சியை மேற்கொண்டன என்பது நினைவிருக்கலாம்.
அத்தோடு 2015 இல் மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்து பதவி விலகுமாறு போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டபோதும் ராஜபக்ச குடும்பத்தினரை பாதுகாத்து வைத்திருந்தது இந்த பௌத்த பேரினவாத பீடங்களாகும். மேலும் இப்பீடங்களைச் சேர்ந்தவர்கள் சூரிய மஞ்சள் நிற ஆடையை உடுத்திருப்பர். இந்த நிகாயம் அடிப்படையில் இந்திய எதிர்புவாதம், தமிழின அழிப்புவாதம் என்ற இரண்டு சித்தாந்தங்களை பலமாகக் கடந்த இரண்டரை ஆயிரம் ஆண்டு காலமாகக் கொண்டவை.
அடுத்துள்ள நிகாயங்களான இராமணிய, அமரபுர நிகாயங்கள் மொத்த பிக்குகள் தொகையில் வெறும் 7 வீதத்தினைரைக் கொண்ட கட்டமைப்பாகும். இது சிங்கள உயர்சாதியினரான கொய்கம தவிர்ந்த ஏனைய கரவ, துரவ, சலாகம ஆகிய சாதிக்கட்டமைப்புக்களைச் சார்ந்த பிக்குகளைக் கொண்டன. இந்த இராமணிய அமரபுர நிகாயங்களால் தனித்து முடிவெடுக்க முடியாது.
உதாரணமாக 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 19வது அரசமைப்புச் சட்டத்தை நீக்கி 20ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்திய போது அத்திட்டத்தை எதிர்த்து உயர்நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கைகள் ஊடகங்களில் வெளிவந்தன. அப்போது இராமணிய, அமரபுர நிகாயங்களும், மகாகிரி மகாசங்கசபையும் இணைந்து கோட்டா அரசாங்கம் ஜனநாயகத்தை அழித்து சர்வாதிகாரத்தை ஊக்குவிக்கிறது ஜனநாயகம் சர்வாதிகாரமாக மாறுவதை தடுப்பது மதகுருமார்களின் பொறுப்பு என்றும் இதனால் பௌத்த பீடங்கள் மூன்றும் 20 வது சீர்திருத்த சட்டத்தை எதிர்க்கும் முடிவை எட்டியுள்ளன எனக்கூறி கூட்டாக கையெழுத்திட்டு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதை சியாம் நிகாயத்தைச் சேர்ந்த அஸ்கிரிய மல்வத்த பீடங்கள் கணக்கில் எடுக்காது. கோட்டாபய ராஜபக்சவை அழைத்து 20 வது சீர்திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த ஆசீர்வதித்தும் அனுப்பியதிலிருந்து இராமணிய, அமரபுர நிகாயங்களின் அதிகாரத்தை அறிந்துகொள்ளலாம்.
இத்தகைய உயர்சாதி கட்டமைப்பால் கட்டமைக்கப்பட்ட உயர்பீடங்களான அஸ்கிரிய, மல்வத்த பீடங்கள் ராஜபக்ச குடும்பத்தினருக்கு மௌன ஆதரவினை வழங்கி வருதலானது மேலும் அவர்களுக்கு பலத்தை அதிகரிக்கிறது. இந்த மகாசங்கத்திற்கு ராஜபக்ச குடும்பத்தை ஆதரிப்பதைத் தவிர வேறு தெரிவு இல்லவே இல்லை என்றே கூறலாம்.
ஏனெனில் சிங்கள பௌத்த பேரினவாத பீடங்கள் சாதிக் கட்டமைப்பை இறுக்கமாக கடைப்பிடிக்கின்றன. இவை பௌத்த பீடங்களில் அரசியலுக்கும் பொருந்தும் . அந்தவகையில் கொய்கம தவிர்ந்த ஏனைய சாதிகளைச் சேர்ந்தவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு அடிப்படையில் இந்த பௌத்த பீடங்கள் விரும்புவதில்லை.
இருந்தபோதும் பௌத்தபீடங்களின் அடிப்படை சித்தாந்தமான இந்திய எதிர்ப்பு, தமிழின எதிர்ப்பு என்ற அடிப்படையில் இந்திய எதிர்ப்பினையும், தேர்தலின் போது தன்னுடைய பச்சைப் புலி படைமூலம் குண்டுவெடித்தல் முதலான குழறுபடிகளைச் செய்திருந்ததாலும் சலவைத் தொழில் செய்யும் சமூகத்தைச் சேர்ந்த ரணசிங்க பிரேமதாசவால் ஜனாதிபதியாக வரமுடிந்தது.
இருந்த போதும் அவரை எண்கோண மண்டபத்தில் இருத்தி கண்டி மகாபீடப்பிக்குகள் ஆசீர்வதிக்க மறுத்ததால் அப்போதைய தலதா மாளிகை தர்மகர்த்தாவான டி.பி.விஜயதுங்கவின் உதவியை நாடி பிக்குகளின் ஆதரவைப் பெற்றார் பிரேமதாச.
இதற்குப் பிரதியுபகாரமாக டி.பி.விஜயதுங்கவை பிரதமரும் ஆக்கினார். பின்னர் அவர் கொல்லப்பட டி.பி.விஜயதுங்க ஜனாதிபதியாக இருந்தார் என்பது வேறு கதை. இதன்மூலம் இனி எந்த சாதியை சேர்ந்தவர்கள் தேர்தலில் வெற்றிபெற்றாலும் அதை விரும்பியோ விரும்பாமலோ பௌத்த பீடங்கள் ஆதரவளிக வேண்டிய நிலைக்கு பிரேமதாசாவின் வரவு வரலாற்றில் ஒரு முன்னுதாரணத்தை தோற்றுவித்துள்ளது என்பதும் கவனத்துக்குரியது.
பொருளாதாரப் பிரச்சினைகளை மையப்படுத்திய மக்களின் காலிமுகத்திடல் உள்ளடங்கலான போராட்டங்களில் நாடாளுமன்றம் கலைக்கப்படவும், கோட்டாபயவுடன் ராஜபக்சவின் குடும்பங்கள் கூட்டாக பதவி விலகவும், ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படவும் என மக்களும், எதிரணிகளும் தொடர்ச்சியாக நடத்தும் போராட்டங்கள் படுகொலைவரை சென்றும் அரசுக்கு மறைமுக ஆதரவினை கொடுக்கும் பௌத்த பீடங்கள் கோட்டவின் ஆட்சியை மாற்றாமல் 19 வது சீர்திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுக்கிறது.
இது அவர்களிடம் தலைமைத்துவ அங்கீகாரம் உள்ள மாற்றுத் தெரிவான சிங்கள பௌத்த பேரினவாத தலைவர்கள் வேறு இல்லை என்றே காட்டுகிறது. ராஜபக்ச குடும்பத்தினரை வீட்டுக்கு அனுப்பிவிட்டு யாரை அடுத்து நியமிப்பது என்கின்ற கேள்வி அவர்களிடம் உள்ளதாக அறியக்கிடக்கிறது.
அரசியல்ரீதியாகப் பார்த்தால் ராஜபக்ச குடும்பத்தினருக்கு பிரதியீடு செய்வதற்கு தகுதியுள்ளவர்களை நோக்கில் முதல் தெரிவாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, கரு ஜயசூரிய மற்றும் அனுரகுமார திசாநாயக்க ஆகியோர் உள்ளனர். இவர்களில் சந்திரிக்கா முதுமையால் தலைமைத்துவத்திற்கு வரமுடியாத நிலையுள்ளது.
அடுத்து ரனில் விக்கிரமசிங்கவை எடுத்துக்கொண்டால் "ஆசை இருந்தாலும் மீசையை வைத்துக்கொண்டு கூழ் குடிக்க முடியாது" என்ற மூத்தோர் முதுமொழிக்கிணங்க இவருக்கு ஆசையும், பௌத்த பீடங்களின் ஆதரவும் இருந்தாலும். தன்னுடைய தொகுதியில் தோற்று, தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றம் வந்தவர்.
இலங்கை அரசியலில் தோற்றுப்போன அரசியல் தலைவராக ரணில் விக்கிரமசிங்கவே திகழ்ந்த நிலையில், ரணில் நேரடியாக நாடாளுமன்ற தேர்தலில் தோற்றது முதன்முறையாக பதிவாகியுள்ளது. எனவே இவர் மக்கள் அங்கீகாரம் அற்ற தலைவராவார். அடுத்த தெரிவான சஜித் பிரேமதாசவை எடுத்துக்கொண்டால் தந்தையைப் போன்று சாதியடிப்படையில் ஓரங்கட்டப்பட்ட நிலையிலும் தந்தை பிரேமதாச போல் கொழும்பு மாநகரில் ஆதரவிருந்தாலும், ஏனைய சாதிகளின் ஆதரவும் இணைத்து மொத்தமாகப் பார்த்தால் 20% மான ஆதரவினையே அவரால் பெறமுடியும்.
இந்த நிலையில் மாகாசங்கம் இவரை அங்கீகரிக்க விரும்பவுமில்லை. ஆசியாவின் சிறந்த அரசியற் பேச்சாளன் என பெயர்பெற்ற பிரேமதாசவைப் போன்று இல்லாமல், சஜித்திடம் பேச்சுத்திறனும், அரசியல் ஆளுமையும் இல்லை என்பதால் இவரால் இன்றைய அரசியலில் காய்களை நகர்த்த முடியாது. அடுத்தவரான கரு ஜயசூரியவை மகாசங்கம் ஏற்கும் ஆனால் இவருக்கான மக்கள் ஆதரவு பெரும்பாலும் இல்லவே இல்லை. நாடாளுமன்றத்தில் 3 ஆசனங்களைக் கொண்ட JVP இன் சார்பில் அனுர குமார திசாநாயக்க உள்ளார்.
இவர் ஒரு கொமியுனிஸ்ட் என்பதாலும், இவர் கொய்கம சாதியைச் சேர்ந்தவரானாலும், கரவ, துருவ, சலாகம சாதியினரின் ஆதரவுத் தளத்தையே கொண்டு இருப்பதாலும் இவரும் மகா சங்கத்தின் முன் தகுதியற்றவராகின்றார். எனவேதான் பௌத்த மகாசங்கத்திடம் ராஜபக்ச குடும்பத்தினரை தவிர வேறு தேர்வு இல்லை என்பதால்" Gotta go Home " என்ற மக்களின் கோசங்களுக்கு மகாசங்கம் மௌனம் காக்கின்றது. மேலும் ராஜபக்ச குடும்பத்தினரை வீட்டுக்கு அனுப்பினாலும் ராஜபக்ச அன்கோவினால் அவர்களின் குடும்பத்தினர் தரப்பில் 600 பேர் உயர் பதவிகளில், நிர்வாக அதிகாரிகளாக இருப்பதாக கூறப்படுகிறது.
இவை அரசியல் நியமனப் பதவியாகும். இதை "Political Appointment" என்பார்கள். எனவே கோட்டாபயவை வீட்டுக்கு அனுப்பினாலும் அவர்களின் குடும்பங்களினால் கட்டமைக்கப்பட்டிருக்கும் குடும்ப ஆட்சியை கண்டுபிடித்து அவர்களையும் அனுப்புவது தற்போதைய நிலையில் இலகுவானதல்ல. கிளர்ச்சிக்கு மாற்றுத்தலமை இல்லாவிடின் அது தூர்ந்து போகும். ராஜபக்ச குடும்பத்தினரை எதிர்கொள்ள தகுதி இல்லாத தலைவர்களாகவே எதிரணியில் உள்ள தலைவர்கள் உள்ளனர்.
அடுத்து இராணுவத்தினை எடுத்துக்கொள்வோமாக இருந்தால் கொய்கம அற்ற சமூகத்தை (Non Goigama) வைத்துக்கொண்டுதான் ராஜபக்ச குடும்பம் தங்களை அரணமைத்துக் கொண்டனர். பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கோட்டாபய ராஜபக்ச பதவியேற்றதன் பின்னான 17 வருடங்களில் தன் ஆதரவாளர்களை கோப்ரல் பதவிக்கு மேல் உயரதிகாரிகள் வரை நியமித்து தம்மைச்சுற்றி அரணமைத்தனர்.
உதாரணமாக சலாகம சாதியினரைச் சேர்ந்த சவேந்திர டி சில்வாவை இராணுவத் தளபதியாக்கியமையைக் கூறலாம். இதனால் இராணுவப் புரட்சிமூலம் ராஜபக்ச குடும்பத்தினரை ஆட்சிக்கவிழ்பு செய்வது சாத்தியமற்றதொன்றாகிவிட்டது.
மொத்த சனத்தொகையில் தமிழ் மக்கள் 12%ம், கொய்கம தவிர்ந்த ஏனைய சாதியினர் 22%ம், கிறிஸ்தவ சமூகத்தினர் 5%ம், உள்ளனர். இதில் அங்கிலிக்கன் திருச்சபையினர் 1% மட்டுமே . இதனால்தான் கத்தோலிக்க திருச்சபை மல்கம் ரஞ்சித் ஆண்டகையினுடை குரலை மகாசங்கமும், ராஜபக்ச குடும்பத்தினரும் கணக்கிலெடுப்பதில்லை.
இதில் தமிழர்களுக்கெதிராக சிங்கள பௌத்த பேரினவாதம் மேற்கொண்ட போரில் காணாமல் ஆக்கப்பட்ட கத்தோலிக்க தமிழ் மதகுருமார்கள் ஏராளம் உதாரணமாக கிழக்கு மாகாணத்தில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட கத்தோலிக்க மதகுரு தொடர்பில் இதுவரை எந்த பெரும்பான்மையின கத்தோலிக்க திருச்சபையினரும் ஒரு கண்டனத்தை தானும் வெளியிடாது மௌனமாகவே உள்ளனர்.
ஏன் 1994 இல் யாழ். / சென்பீற்றர் தேவாலயம் மீது சந்திரிக்கா அரசாங்கம் புக்காரா குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியபோதும், மன்னார் மடு தேவாலயத்தின் மீது தாக்குதல் மேற்கொண்ட போதும், மௌனமாக இருந்த சிங்கள சமூக கத்தோலிக்க திருச்சபையினர், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக ஈஸ்டர் தினத்தில் தேவாலயத்தினுள் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டபோது அலறியடித்துக் கொண்டு வத்திக்கான் வரை படையெடுத்திருப்பதானது தமிழின அழிப்பில் பௌத்த பீடங்கள் மட்டுமல்ல இந்த பெரும்பான்மை இன கத்தோலிக்க திருச்சபையினர் கூட மறைமுக ஆதரவினை வழங்கியிருக்கின்றனர் என்பதைக் காட்டுகிறது.
சிங்கள பௌத்த பேரினவாதம் மேற்கொண்ட தமிழின அழிப்பில் தமிழ் பேசும் கத்தோலிக்க மதத்தினரும், மதகுருவினரும் கொல்லப்பட்டபோது தென்னிலங்கை பெரும்பான்மையின மதகுருக்களின் குரல்கள் எங்கே போயின. இப்போது இலங்கையில் மக்களுக்கு அடிப்படை தேவைகளுடன் எரிபொருள், வரி அதிகரிப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் வீதியில் இறங்கி போராடினாலும், மாபெரும் வெகுஜன எழுச்சி Mass uprising இன்னும் ஏற்படவில்லை.
என்றே கூறலாம். இவ்வகையில் ஒரு மாபெரும் வெகுஜன எழுச்சி ஏற்படும்போது இறுதிச்சக்தியான இராணுவம் வன்முறையை கையிலெடுக்கத் தயங்காது. தற்போது நடைபெறும் நிலமைகளைப் பார்க்கும் போது இன்னும் ஆறு அல்லது ஏழு மாதங்களின் பின் நிலமை இன்னும் மோசமாகலாம்.
இதன் முதற்படியே கடந்த 19.04.22 அன்று றம்புக்கணயில் நடந்த சம்பவம். மேலும் பண்டாரநாயக்க தனிச்சிங்களச் சட்டம் தொடர்பாகவும், தமிழர் உரிமை சார்ந்தும் தீர்வென்றினை எடுக்கமுற்பட்டபோது பௌத்த பேரிவாத பிக்குவாலேயே சுட்டுக்கொல்லப்பட்டார்.
அத்துடன் விடுதலைப்புலிகளுடனான சமாதான காலத்தில் பௌத்த மகாசங்கத்தைச் சேர்ந்தவர்களால் உருவான ஹெல உறுமயவில் இருந்த சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட பிக்குகள் சமாதானத்தைக் குழப்பி போரைத் தூண்டுவதில் கனிசமான பங்கினை வகித்திருந்தனர்.
ஆரம்பத்தில் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரை நடத்துவதற்கு தயங்கியபோது அவர்களைத் தூண்டி போரின் விள விளிம்புக்கு தள்ளிவிட்டதும் இதே பிக்குகள்தான். சுனாமியின் பின்னர் அரசிற்கும் - விடுதலைப் புலிகளுக்கும் இடையே பொதுக்கட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது கிட்டத்தட்ட 5000 வரையிலான பௌத்த பிக்குகள் ஜனாதிபதி செயலகம் வரை சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு மட்டுமல்லாது நீதிமன்றம் வரை சென்று அவற்றுக்கான தடையுத்தரவை யும் பெற்றன.
இன்றும் அதே பிக்குகளே கோட்டாபய ராஜபக்சவை பதவியில் அமர்த்தி இன்றுவரை ராஜபக்ச குடும்பத்தினரை பாதுகாக்கவும் தயங்கவில்லை. மக்கள் வீதியில் இறங்கி போராடி அது அரச வன்முறையில் முடிந்தும் மௌனமாக இருந்தது பௌத்த மகாசங்கம்.
ஆனால் மேற்குலக நாடுகளின் விருப்பமான 20 வது சீர்திருத்த சட்டத்தை நீக்கி 19 வது சீர்திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்தல் தொடர் அழுத்தங்களாக அவர்களால் வெளிப்படுத்தியபோது அவர்களின் விருப்பத்துக்கேற்ப 20 ஆவது சீர்திருத்த சட்டத்தை நீக்கி 19 வது சீர்திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த பௌத்த மகாசங்கம் (20.04.22) அறிக்கை வெளியிட்டது.
உதாரணமாக றம்புக்கண பகுதியில் அரசகட்டமைப்பால் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடந்து 15 நிமிடங்களில் அமெரிக்க தூதுவர் யூலிசங் காட்டமான அறிக்கையை விடுத்தார். இந்த அமெரிக்க தூதூவர் பௌத்தத்தின் மீது அதிக ஈடுபாடும் பௌத்த மகாசங்கத்துடன் நெருங்கிய தொடர்பும் உடையவராக காணப்படுகின்றமையும் இந்த மகாசங்க அறிக்கைக்கு ஒரு காரணமாகவும் அமைந்தது.
இதில் ஒரு முரண் 2020 ஆண்டு இராமணிய, அமரபுர நிகாயங்களும், மகாகிரி மகாசங்கசபையும் இணைந்து கோட்டா அரசாங்கம் 20 ஐ நடைமுறைப்படுத்தியதை கண்டித்து அறிக்கை வெளியிட்ட போது அதை கணக்கிலெடுக்காது 20 ஐ நடைமுறைப்படுத்த கோட்டாபய ராஜபக்சவை அழைத்து ஆசீர் வகித்து அனுப்பிய அதே மகாசங்க பீடங்கள் (அஸ்கிரிய, மல்வத்த) இன்று 20ஐ நீக்கி 19 ஐ நடைமுறைப்படுத்த அறிக்கை வெளியிடுகின்றன.
இதனால் 20வது திருத்த சட்டத்தை நீக்கக்கோரும் மேற்குலகை ஒருபுறம் திருப்திப்படுத்தியதோடு, மறுபுறம் வீதிகளில் இறங்கிப் போராடும் மக்களினை தன்வசப்படுத்தி வைத்திருக்க சங்க ஆணையை பிறப்பிக்க வேண்டிவரும் என்று அறிக்கைவிட்டதானது மகாசங்கத்தின் நற்பெயரை மக்கள் மத்தியில் காப்பாற்றவும் முடிந்துள்ளது.
எல்லாவற்றிற்கும் மேலாக மகாசங்கம் ராஜபக்ச க்களை நீக்குவதற்கு பதிலாக, மேற்படி திருத்தச் சட்ட யோசனையை முன்மொழிந்து தோல்வியில் இருந்து ராஜபக்ச குடும்பத்தினரையும், கோட்டாபய அரசாங்கத்தையும் பாதுகாத்திருக்கிறது. "Gotta Go Home Gota" என்கின்ற கோசங்களை நீர்த்துப்போகச் செய்து கோட்டாபய அரசாங்கத்துக்கு மௌன ஆதரவினை வழங்கி அவர்களை இன்றும் பாதுகாக்கிறது மகாசங்கம்.

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
