ரிஷாத்தின் வீட்டில் பணிபுரிந்த நிலையில் உயிரிழந்த சிறுமி தொடர்பில் வெளியாகியுள்ள புதிய தகவல்
கொழும்பு - பொரள்ளையில் உள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுடீனின் வீட்டில் பணிபுரிந்த நிலையில் தீக்காயங்களால் உயிரிழந்த சிறுமி 15 வயதில் வீட்டு வேலைக்காக அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தலவாகலை, டயகம தோட்டம் ஒன்றில் வசித்த இந்த சிறுமி, ஜூலை 3ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் எரிகாயங்களுடன் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஜூலை 15ஆம் திகதியன்று உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த நிலையில் சிறுமியின் பெற்றோர், சிறுமியை அமைச்சரின் வீட்டிற்கு கடந்த ஆண்டு அக்டோபரில் வீட்டு பணிக்காக அழைத்து வந்தபோது அவருக்கு 15 வயது என விசாரணையில் தெரியவந்துள்ளது.
முன்னதாக இறந்த சிறுமியின் தாயிடமிருந்து பொலிஸார் ஒரு வாக்குமூலத்தை பதிவு செய்திருந்தனர்.
இருப்பினும், அவரிடமிருந்து மற்றொரு வாக்குமூலத்தை பதிவு செய்ய உள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த சிறுமியின் பிரேத பரிசோதனையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் பொலிஸார் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.