மன்னாரில் எரிவாயு விற்பனை முகவர் மற்றும் பொதுமக்களுக்கிடையில் வாய்த்தர்க்கம் (PHOTOS)
மன்னார் - உப்புக்குளம் பகுதியில் உள்ள லிட்ரோ எரிவாயு விற்பனை நிலையத்திற்கு முன்பாக பதற்றமான சூழல் மாலை நிலவியுள்ளதுடன் முகவர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
குறித்த லிட்ரோ எரிவாயு விற்பனை நிலையத்திற்கு முன் கடந்த 10 நாட்களுக்கு மேலாக பலர் எரிவாயு சிலிண்டர்களை எரிவாயு பெறுவதற்காக அடுக்கி வைத்த நிலையில் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட சிலர் சிலிண்டருக்கு காவல் நின்றுள்ளனர்.
10 நாட்கள் கடந்தும் எரிவாயு குறித்த முகவர் நிலையத்திற்கு கிடைக்க பெறாத நிலையில் அந்த எரிவாயு சிலின்டர்களும் அடுக்கப்பட்டு விற்பனை நிலையத்திற்கு முன்பாக வைக்கப்பட்டிருந்தது.
பொலிஸாரிடம் முறைப்பாடு
இந்த நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை(11) குறித்த எரிவாயு விற்பனை நிலைய முகவர் அப்பகுதியில் அடுக்கி வைத்திருந்த எரிவாயு சிலிண்டர்களை தூக்கி எரிந்ததுடன் வரிசையில் வைக்கப்பட்ட சிலிண்டர் உரிமையாளர்களுக்கு எரிவாயு வழங்க முடியாது என வாய் தர்க்கத்தில் ஈடுபட்ட நிலையில், அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நீண்ட நாட்களாக எரிவாயு சிலிண்டர்களை அடுக்கி வைத்து காவல் காத்துக்கொண்டிருந்த பொது மக்கள் எரிவாயு விற்பனை நிலைய முகவருக்கு எதிராக பொலிஸாரிடம் முறைப்பாடு மேற்கொண்டுள்ளனர்.



