வியட்நாமில் சட்டவிரோத பூனை இறைச்சி விற்பனை கும்பல் கைது
வியட்நாமின் ஹோ சி மின் நகரில் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த பூனை இறைச்சி கடத்தல் கும்பலை அந்நாட்டு பொலிஸார் அதிரடியாக முறியடித்துள்ளனர்.
கடந்த வாரம் முழுவதும் நடத்தப்பட்ட இந்த விசேட தேடுதல் வேட்டையின் போது, கடத்தல்காரர்களிடம் இருந்து 400-க்கும் மேற்பட்ட உயிருள்ள பூனைகள் மீட்கப்பட்டுள்ளன.
செல்லப்பிராணிகள் திருடப்படுவது குறித்து தொடர்ந்து வந்த முறைப்பாடுகளை அடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், இந்த கடத்தல் கும்பலைச் சேர்ந்த 9 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மீட்பு நடவடிக்கை
அவர்களின் மறைவிடங்களில் இருந்து 45 கூண்டுகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 400 உயிருள்ள பூனைகளும், பனிக்கட்டிகளால் நிரப்பப்பட்ட பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த 80 இறந்த பூனைகளின் உடல்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

கடந்த மூன்று ஆண்டுகளாக வியட்நாமின் தெற்குப் பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் தெருக்களில் இருந்து பூனைகளை இவர்கள் திருடி, இறைச்சிக்காக விற்று வந்ததை ஒப்புக்கொண்டுள்ளனர்.
இந்த மீட்பு நடவடிக்கைக்குப் பிறகு, மீட்கப்பட்ட பூனைகளில் 40க்கும் மேற்பட்ட பூனைகள் அவற்றின் உரிமையாளர்களிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மோசமான சூழ்நிலை
இருப்பினும், கடத்தல்காரர்களின் கொடூரமான அடைத்துவைப்பு முறை மற்றும் மோசமான சூழ்நிலை காரணமாக பல பூனைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன.

வியட்நாமில் பூனை மற்றும் நாய் இறைச்சி உண்பது சட்டப்பூர்வமானது என்றாலும், விலங்குகளின் ஆதாரங்களைச் சரிபார்க்கும் முறையான அனுமதிகளை வியாபாரிகள் பெற்றிருக்க வேண்டும் என்பது விதியாகும்.
மேலும், செல்லப்பிராணிகளையும் அவற்றின் உரிமையாளர்களின் உரிமைகளையும் பாதுகாக்க சட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்ள வியட்நாம் அரசு திட்டமிட்டுள்ளது.
கருப்பு திரைப்படத்தின் தமிழ்நாடு ஷேர் மற்றும் லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம் Cineulagam