மக்கள் ஆணையை மீற முடியாது : தமிழரசுடனான சந்திப்பின் பின் கஜேந்திரகுமார்
கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியத்துக்கே மக்கள் ஆணை வழங்கினார்கள். இந்த ஆணையை மீறும் வகையில் எவரும் செயற்பட முடியாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழ். தாவடியில் ல் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்நிப்பின் பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வெறுமனே சபைகளை கைப்பற்றுவதற்காக..
மேலும் தெரிவிக்கையில், "இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் சில நாள்களுக்கு முன்பு என்னுடன் தொடர்புகொண்டு பேச விரும்புவதாக அறிவித்தார்.
அதில் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் சுமந்திரன் தானும் பேசவுள்ளதாகக் கேட்டதற்கு அமைய நாங்கள் சந்திப்பதற்கு இணங்கியிருந்தோம்.
அதற்கமைய இந்தப் பேச்சு இடம்பெற்றது. நாம் கொள்கை அடிப்படையிலான இணக்கப்பாட்டை இந்தப் பேச்சின்போது வலியுறுத்தினோம்.
அதில் எந்த இணக்கமும் எட்டப்படவில்லை. அந்த இணக்கப்பாடின்றி வெறுமனே சபைகளை கைப்பற்றுவதற்காக மட்டும் நாம் இணைய முடியாது.
எனவே, ஒரு தலைப்பட்சமாக நாம் ஒரு முடிவு எடுத்துள்ளோம். முன்னர் கூறியது போன்று முதலிடத்தில் இருக்கும் கட்சி தவிசாளர் பதவியைப்பெறவும், இரண்டாவது இடம்பெற்ற கட்சி உப தவிசாளர் பதவியைப் பெறவும் நாம் ஆதரவளிப்போம்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கொள்கை அளவில் இணைவது
இதேவேளை குறித்த சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், இந்த நீண்ட கலந்துரையாடல் உள்ளுராட்சித் தேர்தலுக்குப் பின்னரான சபைகளை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் ஆகும்.
இந்நிலையில், ஒவ்வொரு சபைகளிலும் அதிக ஆசனங்களை பெற்றுக்கொண்ட கட்சிகளுக்கு ஆதரவை வழங்குவது என்ற எமது நிலைப்பாட்டை தேர்தலுக்குப் பின்னர் நாம் அறிவித்திருந்தோம்.
அண்மையில் இதேபோன்ற ஒரு நிலைப்பாட்டை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிவித்திருந்த அதேவேளை இணைந்து செயற்படுவதாக இருந்தால் கொள்கை ரீதியாக ஓர் இணக்கப்பாடு எட்டப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
நிர்வாகங்களை அமைப்பது தொடர்பான இரண்டு கட்சிகளின் நிலைப்பாடும் ஒன்றாக இருந்த காரணத்தினால் இந்த சந்திப்புக்கான அழைப்பினை விடுத்திருந்தோம்.
எவ்வாறாயினும் கொள்கை அளவில் இணைவது குறித்து தொடர்ந்து பேசவேண்டிய தேவை இருக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலதிக தகவல் - தீபன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
