மட்டக்களப்பு பகுதியில் எரிபொருள் தட்டுப்பாடு! - மக்களுக்கு ஏற்பட்டுள்ள அவல நிலை
இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு நீடித்துள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருளை பெறுவதற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சிரமப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து எமது செய்தியாளர் மேலும் தெரிவிக்கையில்,
“மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதேசத்தில் விவசாய செய்கையில் ஈடுபடும் விசாயிகள், வாகனங்களை கொண்டு அன்றாட தொழில் ஈடுபடும் சாரதிகள் தங்களது வாகனத்திற்கான எரிபொருளினை பெற்றுக் கொள்வதற்கு நாளாந்தம் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காலை ஆறு மணி முதல் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன், அவ்வாறு காத்திருந்து நிரப்பு நிலையத்திற்குள் நுழையும் போது எரிபொருள் முடிந்து விட்டதென்று கூறுவதாக வாகன சாரதிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
தற்போது சிறுபோக விவசாய செய்கை ஆரம்பித்துள்ள நிலையில் விவசாய செய்கையை மேற்கொள்ள உழவு வேலைகள் செய்வதற்கு டீசல் இன்மையால் விவசாய செய்கை பின்னோக்கி செல்லும் நிலைமை காணப்படுகின்றது. இதனால் விவசாய செய்கையை செய்ய முடியாமல் டீசலுக்கு பல மணி நேரம் வெயிலில் இருக்க வேண்டிய நிலைமை காணப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதேசத்தில் காணப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் சிலவற்றில் பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணைய் காணப்படுகின்றது.
சில நிலையங்களில் பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணைய் இல்லை. மக்கள்
இதனால் நாளாந்தம் சிரமப்படுவதுடன், அன்றாட தொழிலாளர்களின் தொழில் முற்றாக
பாதிப்படையும் நிலைமை உருவாகியுள்ளது" என மேலும் தெரிவித்துள்ளார்.



