வனவளத் திணைக்களத்தால் கையகப்படுத்தப்படட காணிகள் - குளங்களை விடுவிக்க நடவடிக்கை
வவுனியாவில் கூகுள் வரைபடம் மூலம் வனவளத் திணைக்களத்தால் கையகப்படுத்தப்பட்ட 25 ஆயிரம் ஏக்கர் காணிகள் மற்றும் குளங்களை விடுவிப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளை முன்னெடுத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.திலகநாதன் தெரிவித்தார்.
வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (03.07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "வவுனியா மாவட்டத்தில் வாழ்கின்ற இடம்பெயர்ந்த மக்களுக்கும், காணியற்ற மக்களுக்கும் புதிதாக திருமணம் முடித்து காணிகள் அற்ற குடும்பங்களினதும் நன்மை கருதி அவர்களுக்கான ஒரு தீர்வினை வழங்குவதற்கான நடவடிக்கையினை தேசியமக்கள் சக்தி அரசு எடுத்துள்ளது.
அந்தவகையில் கடந்த 2012 ஆம் ஆண்டில் வவுனியா மாவட்டத்தில் கூகுள் வரைபடத்தின் மூலம் வனவளத் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்ட அனைத்து காணிகளையும் விடுவிப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.
கூகுள் வரைபடம்
குறிப்பாக இந்த மாவட்டத்தில் அண்ணளவாக 25 ஆயிரம் ஏக்கர் காணிகள் அவ்வாறு கையகப்படுத்தப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்திலும் வனவளத்திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 52 ஆயிரம் ஏக்கர் காணிகள் உள்ளது.
அவை அனைத்தையும் தேசியமக்கள் சக்தி அரசாங்கம் விரைவில் விடுவிக்கவுள்ளது. அந்த காணிகளை அதன் உரிமையாளர்களுக்கும், காணிகள் அற்ற மக்களுக்கும் வழங்குவதற்கான துரித நடவடிக்கையினை நாம் மேற்கொண்டுள்ளோம். அத்துடன் வவுனியாவில் 849 குளங்கள் உள்ளது. அதில் 221 குளங்கள் வனவள திணைக்களத்தின் எலைக்குள் அமைந்துள்ளது.
இவற்றில் தற்போது 44 குளங்களை உடனடியாக விடுவித்து அவற்றை மீளவும் புணர்நிர்மானம் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளோம்.
780 மில்லியன் ரூபாய்
அத்துடன் காடுமண்டி காணப்படுகின்ற ஏனைய 149 குளங்களை மீட்டு அவற்றை சுத்தப்படுத்தி மக்கள் பாவனைக்கு விடுவிப்பதற்கான நடவடிக்கை விரைவாக முன்னெடுக்கப்படும். இந்த வருடத்திற்குள் அந்த பணிகள் ஆரம்பிக்கப்படும். இந்த மாவட்டத்தில் ஆறு பெரிய நீர்ப்பாசன குளங்கள் உள்ளன.
அவற்றை புணரமைப்பதற்காக 780 மில்லியன் ரூபாய் தேவையாகவுள்ளது. அந்த நிதியை அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் காணி விடுவிப்பின் முதற்கட்டமாக நெடுங்கேணியில் வனவளத்திணைக்களத்தால் கையகப்படுத்தப்பட்ட காணிகளில் விடுவிக்கப்படவேண்டிய இடங்களை அடையாளப்படுத்தும் ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்தோம்.
வவுனியா வடக்கு பிரதேச செயலாளர், வனவளதிணைக்கள அதிகாரிகள் பொதுமக்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
எதிர்வரும் காலங்களில் வடக்கு கிழக்கு மாகாண அபிவிருத்திக்காக உலக வங்கியானது ஒரு பில்லியன் டொலர் நிதியை வழங்கவுள்ளது. இதன் மூலம் வடகிழக்கு மக்களின் பொருளாதாரத்தை வளம்பெறசெய்து அவர்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்துவோம்" எனத் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

11வது வருட திருமண நாள், மிர்ச்சி செந்தில் வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ... வாழ்த்தும் ரசிகர்கள் Cineulagam
