ஹட்டன் பகுதியில் தொடரும் காடுகளுக்கு தீ வைப்பு சம்பவங்கள்! மக்கள் அதிருப்தி
நுவரெலியா மாவட்டத்தில் தற்போது வறட்சியான காலநிலை நிலவி வரும் நிலையில், காடுகளுக்கு தீ வைக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இவ்வாறு காடுகளுக்கு தீ வைப்பதால் பாரிய குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதாகவும், இதனால் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தீ வைப்பு சம்பவங்கள்
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரூவன்புர - குடாஓயா வீடமைப்பு பகுதியில் அமைந்துள்ள மானா காட்டு பகுதிக்கு நேற்று(06.03.2026) அடையாளம் தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் அப்பகுதியில் உள்ள பெரிய மானா காட்டுப் பகுதி அழிவடைந்ததுடன், நீர் குழாய்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வறட்சியான காலநிலையுடன் காற்றும் வேகமாக வீசுவதால் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் நீர் தட்டுப்பாடு நிலவுவதால், அங்குள்ள பெரும்பாலான மக்கள் குழாய் கிணறுகளை பயன்படுத்தியே குடிநீரை பெற்றுவருகின்றனர்.
குடிநீர் தட்டுப்பாடு அதிகரிப்பு
இந்நிலையில் காடுகளுக்கு தீ வைப்பதால் நிலம் அதிகமாக வெப்பமடைந்து, நிலத்தடி நீர் மேலும் குறைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. இதனால் ஏற்கனவே குடிநீர் பிரச்சினையை எதிர்கொண்டு வரும் அந்தப் பிரதேசத்தில் நீர் தட்டுப்பாடு மேலும் தீவிரமடையக்கூடும் என அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

வறட்சியான காலப்பகுதிகளில் பொழுதுபோக்குக்காகவும், நிலங்களை அபகரிப்பதற்காகவும், மிருகங்களை வேட்டையாடுவதற்காகவும், விறகு சேகரிப்பதற்காகவும் சிலர் காடுகளுக்கு தீ வைப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் வளமான மண், அரிய வகை தாவரங்கள், நீரூற்றுகள் மற்றும் சிறிய உயிரினங்கள் அழிவை எதிர்கொள்வதுடன், மண்சரிவு மற்றும் கற்கள் புரளும் அபாயங்களும் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்படுகிறது.
இந்நிலையில், காட்டில் வாழும் வனவிலங்குகள் நீரும் உணவும் தேடி மக்கள் வசிப்பிடங்களை நோக்கி வரக்கூடிய அபாயமும் காணப்படுகின்றது. எனவே, காடுகளுக்கு தீ வைக்கும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், இதற்கு பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.

ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 19 மணி நேரம் முன்
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri